நோட்புக் கொண்டாட்டம்
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் வேகப் பந்துவீச்சாளர் ஆவார். அவர் விக்கெட் எடுத்தவுடன் நோட்புக்கை எடுத்து அதில் டிக் செய்வதைப் போல செய்து காட்டி, பேட்ஸ்மேனை வெறுப்பேற்றி கொண்டாடுவார்.
ஏன் இப்படி செய்கிறார்?
தன் நோட்புக்கில் யார் யாரின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என குறித்து வைத்துள்ளது போலவும், அதை எடுத்தபின், டிக் செய்து அவரது விக்கெட்டை குறித்து வைத்து வீழ்த்தி விட்டேன் என காட்டுவது போலவும் வில்லியம்ஸ் இப்படி செய்கிறார்.
பல்பு வாங்கினார்
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில், சாட்விக் வால்டன் என்ற பேட்ஸ்மேனை அவுட் ஆக்கி விட்டு, இதே போல செய்தார் வில்லியம்ஸ். வால்டன் அடுத்த போட்டியில், வில்லியம்ஸ் பந்தை தொடர்ந்து சிக்ஸருக்கு விளாசி, இதே நோட்புக் டிக் செய்து அவருக்கு பல்பு கொடுத்தார்.
2017 சம்பவம்
அந்த பல்பு சம்பவம் கிரிக்கெட் உலகையே கலக்கியது. அதன் பின்னும் கேஸ்ரிக் வில்லியம்ஸ் அடங்கவில்லை. 2017ஆம் ஆண்டு சிறந்த பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி விக்கெட்டை எடுத்த வில்லியம்ஸ், அதே நோட்புக் டிக் செய்து அவரை கிண்டல் செய்தார்.
முதல் டி20 போட்டி
இந்த நிலையில், இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் வில்லியம்ஸ் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். முதல் டி20யில் அவரும் பங்கேற்றார். இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்கள் குவித்தது.
கோலி தடுமாற்றம்
இமாலய இலக்கை சேஸிங் செய்த இந்திய அணிகயை ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த கோலி, போட்டியை சரியாக ஆட வேண்டும் என்ற பதற்றத்தில் இருந்தார். பேட்டிங் செய்வதில் நிறைய தடுமாற்றம் இருந்தது.
நிலையான ஆட்டம்
முதலில் கோலி தடுமாறி ஆடினாலும், உடன் ஆடிய ராகுல் சிறப்பாக ஆடி 40 பந்துகளில் 62 ரன்கள் குவித்து வெளியேறினார். அதன் பின் கோலி நிலையாக ஆடத் துவங்கினார். சிக்ஸர்கள் பறந்தது.
சிக்ஸர் அடித்தார்
16வது ஓவரில் கேஸ்ரிக் வில்லியம்ஸ் வீசிய முதல் பந்தில் ஃபோர் அடித்த கோலி, அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வில்லியம்ஸ் தன் விக்கெட்டை வீழ்த்திய பின் நோட்புல் டிக் செய்தது போலவே, இந்த முறை கோலி செய்தார்.
பழி தீர்த்த கோலி
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை ஞாபகம் வைத்து பழி தீர்த்தார் கேப்டன் கோலி. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இந்திய ரசிகர்கள் இதை ரசித்துக் கொண்டாடி வருகிறார்கள்.
|
அபார வெற்றி
இந்தப் போட்டியில் இந்தியா 18.4 ஓவரில் வெற்றி இலக்கான 208 ரன்களை கடந்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார்.