முதலில் பவுலிங்
முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த முடிவை எடுக்க முக்கிய காரணம், பனிப் பொழிவு. இரண்டாவதாக பந்து வீசும் அணி பனிப் பொழிவை மீறி தான் பந்து வீச வேண்டும்.
டாஸ் முடிவு
அது சிரமம் என்பதால், இரண்டாம் பாதி சேஸிங் எளிதாக இருக்கும் என்ற திட்டத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தார் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கீரான் பொல்லார்டு. இந்த முடிவு உண்மையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவியது.
சிறப்பான கேப்டன்சி
அனுபவ வீரரான கீரான் பொல்லார்டு நீண்ட காலம் கழித்து தேசிய அணிக்கு திரும்பி, கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டாஸ் முடிவை சரியாக எடுத்த அவர், அடுத்து பந்துவீச்சு திட்டத்திலும் கணக்கு போட்டு கலக்கினார்.
பீல்டிங் நிறுத்தம்
ஏழு பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தி இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்த அவர், பீல்டிங் நிறுத்துவதில் துல்லியமாக செயல்பட்டார். தொடர்ந்து பீல்டர்கள் இடம் மாறிக் கொண்டே இருந்தது பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுத்தது.
கூடுதல் நேரம்
பீல்டிங் மாற்றம் மற்றும் ஆலோசனைகள் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 50 ஓவர்களை வீச முடியாத நிலை ஏற்பட்டது. 35 ஓவர்களுக்கு பின், வெஸ்ட் இண்டீஸ் அதிக நேரம் எடுத்துக் கொண்டது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக மாறியது. அப்போதும் அசரவில்லை பொல்லார்டு.
7 ஓவர்கள் குறைவு
தன் திட்டங்களை செயல்படுத்துவதில் குறியாக இருந்த பொல்லார்டு, 50 ஓவர் வீசி முடித்த போது 7 ஓவர்கள் வரை குறிப்பட்ட நேர அளவைத் தாண்டி எடுத்துக் கொண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.
பனிப் பொழிவு
வெஸ்ட் இண்டீஸ் அணி நேரம் கடத்தியதில் மற்றொரு தந்திரமும் உள்ளது. நேரம் ஆக, ஆக இரண்டாவதாக பந்து வீசும் இந்திய அணிக்கு அதிக ஓவர்கள் பனிப் பொழிவின் இடையே வீச வேண்டிய நிலை ஏற்படும்.
போட்டியில் வெற்றி
தன் திட்டங்களில் வெற்றி பெற்ற கீரான் பொல்லார்டு, போட்டியிலும் அணியை வெற்றி பெற வைத்தார். ஹோப் 102*, ஹெட்மயர் 139 ரன்கள் குவித்து 288 ரன்கள் சேஸிங்கை எளிதாக்கினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஒப்புக் கொண்ட பொல்லார்டு
போட்டி முடிந்த பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் குறைந்த ஓவர் ரேட் குறித்த விவாதம் எழுந்தது. கடும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிந்தும், விசாரணையில் ஓவர் ரேட் அதிகம் ஆனதற்கு தாங்கள் தான் காரணம் என மேட்ச் ரெப்ரீயிடம் ஒப்புக் கொண்டார் பொல்லார்டு.
ஐசிசி அபராதம்
ஏழு ஓவர்களில் மூன்று ஓவர்களை தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கருதிய மேட்ச் ரெப்ரீ, மீதமுள்ள 4 ஓவர்களுக்கு ஒரு ஓவருக்கு 20 சதவீதம் அபராதம் என்ற விதிப்படி ஒவ்வொரு வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கும் சம்பளத்தில் 80 சதவீதம் அபராதம் விதித்தார்.