மூன்றாவது கேரள வீரர்
கேரளாவில் இருந்து முதலில் இந்திய அணியில் இடம் பெற்ற வீரர் டினு யோகனன். அதன் பின் இடம் பெற்றவர் ஸ்ரீசாந்த். அவருக்கு அடுத்து மூன்றாவதாக இந்திய அணியில் இடம் பெற்றவர் தான் சஞ்சு சாம்சன்.
சஞ்சு சாம்சன் ஆடிய போட்டி
2015ஆம் ஆண்டில் இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் பங்கேற்றார் சஞ்சு சாம்சன். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் மீண்டும் அழைப்பு வரவில்லை.
நீண்ட காலம் கழித்து
ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகள், இந்தியா ஏ போட்டிகளில் சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன், இந்திய டி20 அணியில் சுமார் நான்கு ஆண்டு காலம் கழித்து வாய்ப்பு பெற்றார். வங்கதேச டி20 தொடரில் மாற்று வீரராக மட்டுமே இடம் பெற்றார். ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இடம் மறுப்பு
போட்டியில் ஆடாவிட்டாலும், அடுத்து நடக்கும் தொடர்களில் அவர் தொடர்ந்து உத்தேச அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட போது சஞ்சு சாம்சன் அந்த அணியில் சேர்க்கப்படவில்லை.
மீண்டும் வாய்ப்பு
பின்னர் துவக்க வீரர் தவான் காயம் அடைந்த போது அணியில் மீண்டும் மாற்று வீரராக இடம் பெற்றார். முதல் டி20 போட்டியில் தவானுக்கு பதில் கேஎல் ராகுல் அணியில் துவக்க வீரராக இடம் பெற்றார். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
போட்டியில் ஆடுவாரா சாம்சன்?
இந்த நிலையில், அடுத்து உள்ள இரண்டு போட்டிகளிலாவது சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருக்க இரண்டு காரணங்கள் உள்ளது.
ரிஷப் பண்ட் வாய்ப்பு
விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சரியாக ஆடாவிட்டாலும் அவருக்கு அதிக வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது இந்திய அணி நிர்வாகம். அதனால், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற வாய்ப்பே இல்லை.
கடினம்
வெறும் பேட்ஸ்மேனாக அணியில் இடம் பெற வேண்டும் என்றால், மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாகவே ஆடி வருகிறார்கள். இந்த இரண்டு காரணங்களால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைப்பது கடினம் தான்.
இரண்டாவது டி20 போட்டி
எனினும், இரண்டாவது டி20 போட்டி கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறுவதால், அந்தப் போட்டியில் சொந்த ஊரில் சஞ்சு சாம்சனை இந்திய அணி நிர்வாகம் ஆட வைக்குமா? என எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர் கேரள ரசிகர்கள்.
பேட்டிங் வரிசை
சில ரசிகர்கள் சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் களமிறங்கி ஆடுவார் என்பதால், அவருக்கு மிடில் ஆர்டரில் கூட வாய்ப்பு அளிக்கலாம் என கூறி அவருக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர். கோலி மனது வைப்பாரா?