இந்தியா வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி இலக்கு 208 என்றாலும் கேப்டன் கோலியின் அபார பேட்டிங்கால் இந்தியா அந்த இலக்கை 18.4 ஓவர்களில் எட்டியது.
வெஸ்ட் இண்டீஸ் அதிரடி
ஆனால், முதலில் இந்தியா பந்துவீசிய போது, அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்கள் இயல்புக்கு ஏற்ப அதிரடியாக ரன் குவித்து ஆடினர். ஆனால், இந்திய அணியால் அவர்களை தடுக்க முடியவில்லை.
சுமாரான பந்துவீச்சு
இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர், தீபக் சாஹர் தங்கள் ஓவர்களில் ரன்களை வாரி இறைத்தனர். ஆனால், உண்மையில் நிறைய விக்கெட் வாய்ப்புகள் பறிபோனதால் தான் பந்துவீச்சு இத்தனை பின்னடைவை சந்தித்தது.
நழுவிப் போன வாய்ப்புகள்
ரோஹித் சர்மா இரண்டு முறையும், வாஷிங்க்டன் சுந்தர் இரண்டு முறையும், ராகுல், கோலி தலா ஒரு முறையும் கேட்ச்களை நழுவ விட்டு பெரும் அதிர்ச்சி அளித்தனர். அதனால், விரைவாக விக்கெட் எடுக்க கிடைத்த பல வாய்ப்புகள் வீணானது.
சவால் விட்ட வெ.இண்டீஸ்
முதல் இன்னிங்க்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்து சவால் விட்டது. இந்திய அணி 207 ரன்களை மட்டுமே டி20 போட்டிகளில் சேஸிங் செய்து இருந்தது.
யுவராஜ் சிங் கருத்து
இந்த மோசமான நிலைக்கு காரணம் இந்திய அணியின் சொதப்பல் பீல்டிங் தான் என அனைவரும் பேசி வந்த போது, இந்தியா பேட்டிங் செய்யும் முன், முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் ட்விட்டரில் இந்திய அணியின் பீல்டிங் குறித்து கருத்து தெரிவித்தார்.
|
ட்விட்டர் பதிவு
இன்று இந்தியா பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டது. இளம் வீரர்கள் பந்துக்கு கொஞ்சம் தாமதமாக எதிர்வினை ஆற்றினார்கள். அதிக கிரிக்கெட் ஆடுவதால் ஏற்பட்ட பிரச்சனையா? என கேட்டு இருந்தார் யுவராஜ் சிங்.
சிறந்த பீல்டர் யுவராஜ்
இந்திய அணியின் சிறந்த பீல்டராக அறியப்படும் யுவராஜ் சிங், இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்ததை போட்டிக்கு நடுவே சுட்டிக் காட்டியதால் இணையவாசிகள் இடையே பரபரப்பு எழுந்தது,
காரணம் என்ன?
இந்தியாவின் மோசமான பீல்டிங்கிற்கு காரணம் ஹைதராபாத் மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த மோசமான விளக்கொளி தான் என கூறப்படுகிறது. இரவு நேரத்தில் விளக்கொளியில் போட்டி நடைபெறும் நிலையில், விளக்கொளி இருந்த திசையில் வரும் கேட்ச்களை சரியாக கணிக்க முடியவில்லை என சில விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.