இந்தியா சுற்றுப்பயணம்
இந்த மாதத்தில் இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த தொடர் ரத்தானது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணியினர் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட தற்போது பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிசிசிஐ, எஸ்எல்சி காத்திருப்பு
இலங்கையில் கொரோனாவால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா -இலங்கை தொடரை நடத்த இலங்கை அரசின் ஒப்புதலுக்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் காத்திருக்கும்நிலையில் இந்திய அரசின் அனுமதிக்காக பிசிசிஐயும் காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியை சரிசெய்ய திட்டம்
ஆகஸ்ட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 சர்வதேச டி20 போட்டிகளில் மோதவுள்ளன. இந்த தொடரின் தொலைக்காட்சி உரிமம்மூலம் நிதி நெருக்கடியை சரிசெய்ய இலங்கை கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்
இதனிடையே ஆசிய கோப்பை டி20 தொடரையும் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இலங்கைக்கு அளித்துள்ளது. இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா உறுதி செய்துள்ளார். இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் இடம்பெற்று ஆடவுள்ளன.
பாகிஸ்தான் நடத்த முடிவு
இந்த ஆண்டு ஆசிய கோப்பை டி20 தொடரை யூஏஇ-யில் வரும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தான் நடத்தவிருந்தது. இந்நிலையில் இந்த தொடரை நடத்த பிசிபி தலைவர் இஷான் மணி கேட்டுக் கொண்டதையடுத்து தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது. வரும் 2022ல் இலங்கை அணி இந்த தொடரை நடத்தவிருந்த நிலையில் அப்போது பிசிபி நடத்தும் என்று தெரியவருகிறது.