முதல் டெஸ்ட் ஸ்கோர்
முதல் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது. பிறகு இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட் சதம் மூலமாக 303 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அனுபவம் வாய்ந்த பவுலர்களை வைத்திருந்தாலும், இந்த இலக்கை இந்தியா சுலபமாக எட்டிப்பிடித்திருக்கும் எனினும் மழைக்குறுக்கிட்டு வெற்றி வாய்ப்பு தவறியது.
2வது டெஸ்ட் போட்டி
முதல் போட்டி ஏமாற்றம் கொடுத்ததால் தற்போது 2வது டெஸ்ட் போட்டியின் பக்கம் ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
புள்ளிகள் குறைப்பு
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் நடுவர் கிறிஸ் பிராட் வைத்த குற்றச்சாட்டால், இரு அணிகளுக்கும் தண்டனை கொடுத்துள்ளது ஐசிசி அமைப்பு. அதாவது முதல் டெஸ்டின் போது இரு அணிகளுமே ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசாமல், அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போது இரு அணிகளுமே 2 புள்ளிகளுடன் மட்டுமே உள்ளது. இந்தியாவுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டி இதுவாகும். இதிலே இப்படி ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பு
இதுமட்டுமல்லாமல் இரு அணிகளுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் போட்டி கட்டணத்தில் 40% தொகையை அபராதமாக செலுத்த ஐசிசி அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இனி இதுபோன்ற தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்காக ஐசிசி கடும் நடவடிக்கைகளை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.