ஆசியக்கோப்பை தொடர்
இரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய அணி காத்துள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டுமே குரூப் ஏ பிரிவில் தான் இடம்பெற்றுள்ளன. எனவே லீக் சுற்றில் வழக்கம் போல வரும் ஆகஸ்ட் 28ம் தேதி ஒருமுறை இரு அணிகளும் மோதிக்கொள்ளும். இதனைத்தொடர்ந்து சூப்பர் 4 சுற்று நடைபெறவிருக்கிறது.
2வது மோதல் எப்போது
ஒவ்வொரு குரூப்பில் இருந்தும் 2 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தேர்வாகும். அந்த வகையில் ஏ குரூப்பில் 3வது அணியாக சிறிய அணிதான் இருக்கும் என்பதால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பெரும்பாலும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும். இந்த சுற்றில் தேர்வான அணிகள் தங்களுக்குள் மீண்டும் ஒருமுறை மோதிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் போட்டியில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் மோதிக்கொள்ளலாம்.
3வது முறையாக மோதல்
சூப்பர் 4 சுற்றில் இருந்து 2 அணிகள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகிவிடும். நடப்பாண்டு தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தான் இருப்பதிலேயே பலமான அணிகளாக உள்ளன. இவை இரண்டும் இலங்கை, ஆஃப்கானிஸ்தான் போன்ற அணிகளை வீழ்த்தி வந்துவிட்டால், செப்டம்பர் 11ம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் 3வது முறையாக மோதிக்கொள்ளலாம்.