ஒருநாள் சர்வதேச போட்டிகள்
சர்வதேச அளவில் முதலிடங்களில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் புத்தாண்டில் தங்களின் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி தொடரில் மோதின. இதில் இந்தியா 3க்கு 2 என்ற நிலையில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது.
வங்கதேசத்துடன் மோதல்
கடந்த நவம்பர் மாதத்தில் வங்கதேசத்துடன் டெஸ்ட் தொடரில் இந்தியா மோதிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் பந்தை கொண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்தப்பட்டது. இரு அணிகளுக்கும் இது முதல் பகலிரவு போட்டியாக இருந்தது. இந்தப் போட்டியில் நேரம் அதிகம் இருந்த நிலையில், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின்மூலம் இந்திய அணி வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
விராட் கோலி கிரீன் சிக்னல்
கடந்த 2018ல் பகலிரவு போட்டிக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்தபோது, தங்களது அணிக்கு அந்த போட்டியில் போதிய அனுபவம் இல்லாததை காரணம் காட்டி பிசிசிஐ மற்றும் விராட் கோலி மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வங்கதேசத்துடன் விளையாடிய பகலிரவு போட்டி தந்த தெம்பில், விராட் கோலி கடந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவுடனான பகலிரவு போட்டிக்கு தலையசைத்தார்.
கொண்டாட்டத்துடன் எதிர்கொள்வோம்
ஆஸ்திரேலியாவின் காபா மற்றும் பெர்த் என எந்த இடத்தில் நடத்தப்பட்டாலும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராக உள்ளதாக கடந்த மாதத்தில் விராட் கோலி தெரிவித்திருந்தார். டெஸ்ட் போட்டிகளை எந்தவிதத்தில் ஆடினாலும் அது மிகுந்த உற்சாகத்தையே அளிக்கும் என்று கூறியிருந்த கோலி, ஆஸ்திரேலியாவுடன் பகலிரவு போட்டி எப்போது நடத்தப்பட்டாலும் அதில் பங்கேற்க தாங்கள் தயார் என்றும் கூறினார்.
காபாவில் நடைபெறும் பகலிரவு போட்டி
கடந்த மாதத்தில் இந்தியா -ஆஸ்திரேலியாவுடனான சர்வதேச ஒருநாள் போட்டி தொடரின்போது இந்திய பிசிசிஐ நிர்வாகிகளை சந்தித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகிகள் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவின் சுற்றுப்பயணத்தின்போது இரு அணிகளுக்கு இடையில் பகலிரவு போட்டியை நடத்த திட்டமிட்டு அதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் காபாவில் இரு அணிகளுக்கு இடையில் பகலிரவு போட்டி நடைபெறும் என்று கூறப்படுகிறது.