வரும் 22ம் தேதி துவக்கம்
இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் முதல்முறையாக பகலிரவு போட்டியாக வரும் 22ம் தேதி துவங்கவுள்ளது.
டிக்கெட்டுகள் விற்பனை
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுவது இதுவே முதல்முறை. இதை கொண்டாட இப்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த கிரிக்கெட் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மேற்குவங்கத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொல்கத்தாவிற்கு படையெடுக்க உள்ளனர்.
வண்ணமயமாக காட்சியளிக்கும் நகரம்
இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு போட்டியாக டெஸ்ட் மேட்ச் நடைபெறவுள்ளநிலையில், இதை குறிக்கும் வகையில் நகரின் புகழ்பெற்ற சாகித் மினார் உள்ளிட்ட பல பூங்காக்கள் வண்ண விளக்குகளால் ஒளிர உள்ளன.
ஹெலிகாப்டரில் வரும் பந்து
இந்த வரலாற்று கொண்டாட்டத்தில் துணை ராணுவத்தினரும் பங்கேற்கவுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்கு வந்திறங்கும் அவர்கள், இரண்டு அணிகளின் கேப்டன்களிடமும் பிங்க் பந்தை தர உள்ளனர்.
பிங்கு மற்றும் டிங்கு
ரசிகர்களை கவர பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளையும் கவரும் வகையில் மைதானத்தில் வலம்வர உள்ள பிரமாண்ட பலூன் மனிதர்கள் பிங்கு மற்றும் டிங்கு உருவமும் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
மைதானத்தின் அருகில் பறக்கும்
பிங்க் பந்தில் இந்த டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளநிலையில், இதை குறிக்கும்வகையில், போட்டி துவங்கி முடியும் வரையில் மைதானத்தில் அருகில் பிங்க் நிற பிரமாண்ட பலூனும் பறக்கவிடப்பட உள்ளது.
மின்னும் ஹவுரா பாலம்
டாடா ஸ்டீல் கட்டடமும் 3டி மேப்பிங்கால் வரும் 20ம் தேதிமுதல் மிளிர உள்ளது. மேலும் ஹவுரா பாலம் துவங்கி வித்யாசாகர் சேது வரையில் வண்ண விளங்குகள் ஒளிரவிடப்பட உள்ளன.
பேருந்துகளில் போட்டி குறித்து பதிவு
நகரெங்கும் எல்இடி போர்டுகள் 6 இடங்களில் வைக்கப்பட உள்ளன. 10க்கும் மேற்பட்ட இடங்களில் பில்போர்டுகள், பேருந்துகளில் போட்டி குறித்த பதிவுகள் உள்ளிட்டவையும் திட்டமிடப்பட்டுள்ளன.
கிரிக்கெட் திருவிழா
இன்னும் இரு தினங்களில் இரு அணி வீரர்களும் கொல்கத்தாவிற்கு வரவுள்ள நிலையில், கிரிக்கெட் திருவிழாவை கொண்டாட தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.