அடுத்தடுத்து சொதப்பல்
கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்வாட், இந்த ஆட்டத்தில் தேவையில்லாத ஷாட் ஆடி 5 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க, இரண்டாவது பந்தில் பெவிலியன் திரும்பினார். ஒரு அளவுக்கு தாக்கு பிடித்த இஷான் கிஷன் 26 பந்துகளில் 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
பண்ட் ஏமாற்றம்
இதன் மூலம் இந்திய அணி 6.1வது ஓவரில் 40 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து ரிஷப் பண்ட். 23 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்களில் வெளியேறி காலை வாரினார். இதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் பவுண்டரிகளாக விளாசி தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அளித்தார். 26 பந்துகளை எதிர்கொண்ட கார்த்திக், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
கடைசி 5 ஓவர்
வழக்கம் போல் அதிரடி காட்டிய ஹ்ர்திக் பாண்டியா 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களை விளாசி, 31 பந்துகளில் 46 ரன்களை விளாசினார். இறுதியில் அக்சர் பட்டேல் 8 ரனகள் அடிக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. முதல் 10 ஓவரில் இந்திய அணி 56 ரன்களே அடித்த நிலையில் கடைசி 5 ஓவரில் மட்டும் 73 ரன்களை இந்தியா விளாசியது.
சரிந்த விக்கெட்
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. கேப்டன் பெவுமா காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். பிரிட்டோரியஸ் டக் அவுட் ஆக, மோசமான ரன் அவுட்டில் சிக்கி டி காக் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து, சாஹல், ஆவேஷ் கான் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்காவின் நடுவரிசை சிதறியது. வெண்டர் டுசன் 20 ரன்கள் எடுக்க, டேவிட் மில்லர் 8 ரன்கள், கிளாசென் 9 ரன்கள், யான்சென் 12 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர்.
சோகமான சாதனை
குறிப்பாக ஆவேஷ் கான் வீசிய தனது 3வது ஓவரில் 3 விக்கெட்டுகளை எடுக்க, தென்னாப்பிரிக்க அணி 87 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணியின் குறைந்தபட்ச டி20 ஸ்கோர் இதுவாகும். ஆவேஷ் 4 விக்கெட்டுகளையும். சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த இந்திய அணி 2க்கு2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஞாயிற்றுகிழமை பெங்களூருவில் நடைபெறுகிறது.