டாஸ்
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் வீரர்கள் ஜேசன் ராய் 17, ஜோஸ் பட்லர் 18, டேவிட் மலான் 18 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ 49, லிவிங்ஸ்டன் 30, மொயின் அலி 43, ஆகியோர் அதிரடி காட்ட இந்தியாவுக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிரடி தொடக்கம்
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், இஷான் கிஷான் ஆகியோர் மிரட்டினர். ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய இஷான் கிஷான், அதே ஃபார்மை அப்படியே காட்டினார். 46 பந்துகளை சந்தித்த கிஷான் 70 ரன்கள் குவித்தார். மறுமுனையில் 24 பந்துகளை சந்தித்த கே.எல்.ராகுல் 51 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் ஓப்பனிங் பலமாக உள்ளது தெரியவந்தது. அதே போல வெற்றியும் உறுதியானது.
அபார வெற்றி
இதனைத்தொடர்ந்து வந்த விராட்கோலி 11 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களுக்கும் வெளியேறினர். பின்னர் கடைசி சில ஓவர்களில் ரிஷப் பண்ட் 29 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 12 ரன்கள் விளாசி வெற்றி இலக்கிற்கு கொண்டு சென்றனர். இதனால் 19 ஓவர்களிலேயே இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பலம், பலவீனம் என்ன?
இந்திய அணியை பொறுத்தவரை டாப் ஆர்டர் பேட்டிங் சற்று பலமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர். இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா அணியுடன் பயிற்சி போட்டி மேற்கொள்ளவுள்ளது. இதற்கு பின்னர் வரும் 24ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் முதல் ஆட்டத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.