வெலிங்டன்: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருக்கான நியூசிலாந்து அணியில், இந்தியாவில் பிறந்த அஜாஸ் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டித் தொடர் நடக்க உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் அக்டோபரில் இந்த போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான தேதிகள் இறுதியாகவில்லை.
இந்த டெஸ்ட் போட்டித் தொடருக்கான அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. அதில் மும்பையில் பிறந்த அஜாஸ் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். 29 வயதாகும் அஜாஸ் படேல், சிறு வயதிலேயே நியூசிலாந்து வந்து விட்டார். உள்ளூரில் நடக்கும் முதல்தர வரிசைப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
சென்ட்ரல் ஸ்டேக்ஸ் அணிக்காக விளையாடும் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல், கடந்த சீசனில் 48 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம், சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றார். தற்போது நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.