குவியும் விமர்சனம்
இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருந்தும் டிராவிட், ரோஹித் கூட்டணி செய்த தவறுகள் ஆசியக் கோப்பையை கைநழுவ விட்டது. இந்தியா இறுதி போட்டி வாய்ப்பை இழந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியும், பல்வேறு வீரர்கள் இன்னும் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்கார் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திலீப் வெங்சர்கார் கேள்வி
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணி அனைத்து போட்டிகளையும் சுழற்சி முறையில் வீரர்களை மாற்றி வருகிறார்கள். டி20 உலக கோப்பையில் எந்த 11 வீரர்களை வைத்து விளையாடுவது என்பதற்காக இப்படி ஆராய்வது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இந்திய அணி நிர்வாகம் இப்படி வீரர்களை வைத்து ஆராய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஏன் கார்த்திக் இல்லை?
தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தார்கள். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அஸ்வினை இலங்கைக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் களம் இறக்கினார்கள். இந்திய அணியில் உள்ள அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று சுழற்சி முறையில் இப்படி செய்திருக்கிறார்கள். ஆனால் ஆசிய கோப்பை என்பது சாதாரண தொடர் அல்ல. ஆசிய கோப்பையை இந்திய அணி வென்று இருந்தால் அது வீரர்களுக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கும் .
பெரிய தொடர்
11 வீரர்களை சரியாக தேர்வு செய்ய இருத்தரப்பு தொடர்களை பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களை நீங்கள் வெற்றி பெற வேண்டும்.அதுதான் முக்கியம் என்று அவர் சாடியுள்ளார். இந்த நிலையில் இலங்கை பாகிஸ்தான அணி வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வருகின்றனர்.