இரண்டு அணிகள்
ஜூன் 22ம் தேதி முடியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு மாதம் இடைவெளி உள்ளது. இந்த நிலையில், ஜுலை மாதத்தில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்திருந்தார். அதேசமயம், இந்திய 'பி' டீம் இத்தொடரில் பங்கேற்கும் என்றும் கூறினார். சீனியர் வீரர்களில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவர் மட்டுமே இத்தொடரில் பங்கேற்கின்றனர். மற்ற அனைத்து வீரர்களும் ஜுனியர்கள் தான்.
ஜுலையில் போட்டிகள்
அதேபோல், ரவி சாஸ்திரி, பாரத் அருண், விக்ரம் ரத்தோர் ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சி அளிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை செல்லும் இந்திய அணி வீரர்கள் பட்டியல், இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு, இத்தொடருக்கான பயோ-பபுள் உருவாக்கப்படும். ஜுலை 13, 16, 19 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், ஜுலை 22-27 வரை 3 டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.
இரு வெவ்வேறு அணிகள்
இப்படி ஒரே சமயத்தில், பிசிசிஐ வெவ்வேறு இந்திய அணிகளை வெவ்வேறு தொடர்களுக்கு அனுப்புவது ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். ஆனால், 1998ம் ஆண்டிலேயே, இதுபோன்று ஒரு வெவ்வேறு அணிகளை வேறு வேறு தொடர்களுக்கு பிசிசிஐ அனுப்பியது. கோலாலம்பூரில் நடந்த காமன்ல்வெல்த் விளையாட்டுத் தொடரில் கலந்து கொள்ள அஜய் ஜடேஜா தலைமையிலான இந்திய அணி அனுப்பிவைக்கப்பட்டது. இதில், சச்சின், லக்ஷ்மன், அனில் கும்ப்ளே ஆகிய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
கங்குலி தனி டீம்
அதேசமயம், பாகிஸ்தானுக்கு எதிரான சஹாரா கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முகமது அசாருதீன் தலைமையிலான அணி அனுப்பி வைக்கப்பட்டது. இதில், கங்குலி, டிராவிட், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் ஆகிய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். காமன் வெல்த் தொடரில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் கனடாவை வென்றது. ஆன்டிகுவா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டு முடிவு கிடைக்காததால், ஒரேயொரு வெற்றியுடன் குரூப் ஸ்டேஜில் இருந்து வெளியேறியது இந்தியா.
பாகிஸ்தான் லீடிங்
அதன் பிறகு, காமன்வெல்த் தொடரில் விளையாடிய இந்திய வீரர்களை, சஹாரா கோப்பை தொடரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ கூறியது. ஆனால், பாகிஸ்தான் நிர்வாகம் அதற்கு மறுத்துவிட்டது. பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சச்சினும், ஜடேஜாவும் மட்டும் விளையாட அனுமதிக்கப்பட்டது. அப்போது 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரில், 2-1 என்று பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தது.
கப்பும் போச்சு
பிறகு, நான்காவது போட்டியில் ஜடேஜா இணைந்து கொள்ள, குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்ததால் சச்சின் அப்போட்டியில் விளையாடவில்லை. ஆனால், இறுதிப்போட்டியில் அவர் கலந்து கொண்டார். ஓப்பனிங் இறங்கி 77 ரன்களும் விளாசினார். ஆனால், இறுதியில், பாகிஸ்தான் வெல்ல 4-1 என்று அந்த அணி இந்தியாவை துவம்சம் செய்து கோப்பையைக் கைப்பற்றியது. 'medal vs money' என்று இரண்டுக்கும் குறிவைத்த பிசிசிஐக்கு ஏமாற்றமே மிஞ்சியது.