மான்செஸ்டர்: இந்தியா பாகிஸ்தான் நடுவேயான இன்றைய லீக் ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
உலக கோப்பை தொடரில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மான்செஸ்டர் மைதானத்தில் மோதி வருகின்றன. டாஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.
மான்செஸ்டரில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால், மைதானம் ஈரமாக இருக்கும் என்பதாலும், பிட்ச்சில் ஈரப்பதம் இருந்தால் பந்து ஸ்விங் ஆகும் என்பதாலும், பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. ஆனால், நடந்ததோ வேறு. இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ரோகித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் பின்னி பெடலெடுத்துவிட்டனர்.
அதிலும், ரோகித் வழக்கத்தைவிட இன்று ஆக்ரோஷமாக காணப்பட்டார். பவுன்சர் பந்துகளும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்பின்னரையும் சிக்சரோடுதான் வரவேற்றார். ஆரம்பத்தில் சில ஓவர்கள் மட்டுமே, ரன் ரேட் குறைவாக இருந்தது. ஆனால், அதன்பிறகு பட்டாசு கொளுத்திப் போட்டது இந்திய பேட்டிங்.
முதலில் விக்கெட்டை இழந்துவிட கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வோடு ஆரம்பித்த இந்தியா, பிறகு, தனது வழக்கமான அதிரடியை காட்ட ஆரம்பித்தது. இதனால் ஸ்கோர் மளமளவென ஏறியது. 17.3வது ஓவரில், இந்தியா 100வது ரன்னை எட்டியது.
54 பந்துளில் 37 ரன்களில் ராகுலும், 51 பந்துகளில் 60 ரன்களுடனும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் களத்தில் நின்றனர்.