லண்டன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 11 பேர் கொண்ட அணியில் ஜடேஜாவை சேர்த்தால் இந்திய அணிக்கு வெற்றி உறுதி என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி உள்ளனர்.
2019 உலக கோப்பை தொடரில், அனைத்து அணிகளும் தங்களது தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணி தமது முதல் போட்டியில், வரும் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணிதான் கடைசி அணியாக தனது முதல் தகுதிச் சுற்றை விளையாட உள்ளது.
தென் ஆப்ரிக்க அணி 7 நாட்களில் 3 அணிகளை தகுதிச் சுற்றில் எதிர் கொண்டு அனுபவ அணியாக காணப்படுகிறது. எனவே இந்திய அணி அதிக பயிற்சியுடன் தென்ஆப்ரிக்காவை எதிர்கொள்ளும். பெரிய பிரச்னையாக கருதப்பட்ட இந்திய அணியின் 4ம் வரிசைக்கு தீர்வு கிடைத்திருக்கிறது.
கேஎல் ராகுல் சதம் அடித்ததால் அவர் தான் 4ம் வரிசை வீரர். தொடக்க ஆட்டத்தில் விஜய் சங்கர் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவது சந்தேகமே. இங்கிலாந்து மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம் கிடையாது. எனவே இந்திய அணியின் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவது சற்று கடினம்.
ஏதேனும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த முடிவை இந்திய அணி தைரியமாக எடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி உள்ளனர்.
அவருடைய சிறப்பான ஆட்டம், நியூசிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் அரைசதத்துடன் வெளிபட்டது. தவிர 8ம் நம்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கி ஜடேஜா வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கடந்த காலங்களிலும் இவரது பேட்டிங் இந்திய அணிக்கு அதிக இடங்களில் கை கொடுத்துள்ளது.
பீல்டிங்கிலும் கலக்கும் ஜடேஜா, ஒருநாள் போட்டிகளில் ரன் அவுட் மற்றும் கேட்சுகளை சிறப்பான முறையில் பிடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளார். எனவே துணிச்சலாக இந்த முடிவை எடுத்து, அணியில் ஜடேஜாவை சேர்க்க வேண்டும். செய்வார்களா..?