ராஞ்சி: ராஞ்சியில் மழை குறுக்கீடுக்கு உள்ளான இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்றிரவு நடைபெற்றது. அந்த அணியில் கேப்டன் ஸ்மித், பயிற்சியின்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். எனவே டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பை வகித்தார். ஸ்மித்துக்கு மாற்று வீரராக மார்கஸ் ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில், தவான், குல்தீப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஹானே, அக்சர் பட்டேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆஸி. அணி 18.4 ஓவர்களில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது.
மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 6 ஓவர்களில் 48 ரன்கள் இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரோகித் ஷர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் தவானும் (15), கேப்டன் கோஹ்லியும் (22) வெற்றியை உறுதி செய்தனர்.
கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், 3 பந்துகள் மிச்சமிருந்த நிலையில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை சுவைத்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதன்மூலம் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.