கொரோனா தாக்கம்
ஐபிஎல் 2021 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், அணி வீரர்களுக்குள் பரவிய கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வாரத்தில் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்களும் சொந்த ஊர்கள் மற்றும் நாடுகளுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து அடுத்த தொடர்களில் பிசிசிஐ கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
இங்கிலாந்து பயணம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரையொட்டி இநந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணி அடுத்த மாதம் முதல் வாரத்தில் இங்கிலாந்து செல்லவுள்ளது. தொடர்ந்து இரண்டையும் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பவுள்ளது.
ஐபிஎல் குறித்து பேச்சுவார்த்தை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பங்கேற்று பார்வையிட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை அங்கு நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிகிறது.
தன்னம்பிக்கை அளித்த வெற்றி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இரண்டையும் வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி தீவிரமாக உள்ளது. இதற்கென சிறப்பான வகையில் தயாராகியுள்ளதாகவும் ஆஸ்திரேலிய தொடர் கொடுத்த தன்னம்பிக்கை அணியை சிறப்பாக உருவாக்கியுள்ளதாக என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
கங்குலி அறிவிப்பு
இதனிடையே இந்திய அணி ஜூலை மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளதாகவும் கூறியுள்ளார்.