இந்திய அணி குறித்து கவுதம் கம்பீர்
முன்னாள் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், கடந்த 2011 உலக கோப்பை வெற்றியின்போது இந்திய அணியில் இருந்தவர். 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணியின் இந்த வெற்றி அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது. இந்நிலையில் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய கவுதம் கம்பீர் அணி குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
பெரிய போட்டிகளில் வெற்றி
இந்திய அணி பெரிய போட்டிகளின் நெருக்கடி நேரங்களை கையாள திணறுவதாகவும் இதனால் உலக கோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் அரையிறுதிவரை சென்றாலும் வெற்றியை பெற முடியாமல் உள்ளதாகவும் கவுதம் கம்பீர் மேலும் கூறியுள்ளார். இத்தகைய பெரிய போட்டிகளில் வெற்றி பெறும்வரை தன்னை சாம்பியன் என்று இந்தியா கூறிக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீரர்.. மிகசிறந்த வீரர் வித்தியாசம்
கடந்த 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளின் உலக கோப்பைகளை வெற்றிக் கொண்டுள்ள இந்திய அணி, அதையடுத்து 4 உலக கோப்பை தொடர்களில் அரையிறுதியுடன் வெளியேறியுள்ளது. இதை சுட்டிக் காட்டியுள்ள கவுதம் கம்பீர், நெருக்கடி நேரங்களில் சிறப்பாக செயல்படுவதன்மூலம் சிறந்த வீரர் மற்றும் மிகச்சிற்நத வீரராக அணியில் தங்களை வீரர்கள் நிலைநிறுத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கையாளத் தவறும் அணி
மற்ற அணி வீரர்கள் தங்களது நெருக்கடி நேரங்களை சிறப்பாக கையாளுவதாகவும் ஆனால் இந்திய அணி அதில் தவறுவதாகவும் கம்பீர் மேலும் கூறியுள்ளார். மன நெருக்கடியை சமாளிக்கும் திறனே நெருக்கடி சூழல்களையும் சமாளிக்கும் திறமையை வீரர்களுக்கு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நமக்கு அனைத்தும் கிடைத்துள்ளதாக நாம் கூறிக்கொள்கிறோம். உலக சாம்பியன் ஆவதற்கான தகுதி நமக்கு இருக்கிறது. ஆயினும் போட்டிகளில் அதை நிரூபிக்க தவறும்பட்சத்தில் நம்மை உலக சாம்பியன் என்று கூறிக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.