டாக்கா: ஆசிய கிரிக்கெட்டில் இந்திய அணி இன்று ஐக்கிய அரபு எமிரேட்சுடன் மோதுகிறது. இதில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக இந்திய கேப்டன் டோணி அறிவித்துள்ளார். இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இப்போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு தரப்படுகிறது.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 3 அணிகளையும் அடுத்தடுத்து வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் வியாழக்கிழமையான இன்று குட்டி அணியான ஐக்கிய அரபு எமிரேட்சை எதிர்கொள்கிறது. வெற்றிப்பயணத்தை நீட்டிப்பதில் இந்திய வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். அதே சமயம் இறுதிசுற்றை உறுதி செய்து விட்டதால் இன்றைய ஆட்டத்தில் இதுவரை வாய்ப்பு பெறாத வீரர்களை களம் இறக்க இந்திய அணி முடிவு செய்துள்ளது.
இது குறித்து கேப்டன் டோணி அளித்த பேட்டி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்டத்துக்கான இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும். எத்தனை மாற்றங்கள் என்பதை ஆலோசித்து முடிவு செய்வோம்.முடிந்தவரை பல மாற்றங்களை செய்வோம்.
முதுகுவலியால் டோணியும், கால் விரல் வலியால், ரோகித் சர்மா, குதிகால் வலியால் ஷிகர் தவான் அவதிப்படுகிறார்கள். இவர்களில் இருவருக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதே போல் ஒன்பது 20 ஓவர் போட்டிகளில் தொடர்ச்சியாக பந்து வீசியுள்ள மூத்த வேகப்பந்து வீச்சாளர் 36 வயதான ஆசிஷ் நெஹ்ராவுக்கும் ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
தவானுக்கு பதிலாக ரஹானே, நெஹ்ராவுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், டோணி ஓய்வு எடுக்க விரும்பினால், பார்த்தீவ் பட்டேல் களமிறங்குவர். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவர் நீக்கப்பட்டு ஆல்-ரவுண்டர் பவான் நெகி சேர்க்கப்படலாம். இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் ஹர்பஜன் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கும்.