லண்டன்: பாகிஸ்தான் பவுலிங் அட்டாக்கிடம் மொத்த விக்கெட்டுகளையும் பறி கொடுத்து சரணடைந்தது இந்திய அணி.
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 338 ரன்கள் குவித்துள்ள நிலையில், இந்திய அணி மாபெரும் வெற்றி இலக்கை துரத்துவதில் முதல் ஓவரிலேயே சொதப்பிவிட்டது.
முதல் ஓவரிலேயே முகத்தில் கரி பூசும் வகையில் விக்கெட்டைபறிகொடுத்தார் ரோகித் ஷர்மா. 2.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா. முதல் ஓவரில் ரோகித் ஷர்மா அமிர் பவுலிங்கில் எல்பிடபிள்யூ ஆனார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. இந்த நிலையில், இந்தியா ஸ்கோர் 6ஆக இருந்தபோது, கேப்டன் கோஹ்லி அமீர் பந்தில் சதப் கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 5 ரன்கள் எடுத்திருந்தார்.
இதையடுத்து தவானுடன் யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் எடுக்க நேரம் எடுத்தது. ஆனால் தவான் நல்ல ஃபார்மில் இருந்ததால் அவ்வப்போது அடித்து மொத்தம் 4 பவுண்டரிகளை விளாசி கொஞ்சம் பிரஷரை குறைத்தார். ஆனால் அமீர் பந்து வீச்சில் கீப்பர் சர்ப்ராசிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்களில் வெளியேறினார் தவான்.
இந்தியா 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்து திணறி வந்தது. அனுபவம் வாய்ந்த யுவராஜ்சிங்கும், டோணியும் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சதப் கான் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் யுவராஜ்சிங் 22 ரன்களில் அவுட்டானார். ஹசன் அலி பந்து வீச்சில் இமாத் வாசிமிடம் கேட்ச் கொடுத்து டோணி 4 ரன்களில் வெளியேறினார்.
கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா களத்தில் உள்ளனர். இந்தியா 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்தது. 17வது ஓவரின் கடைசி பந்தில் சதப்கான் பந்தில் கேதர் ஜாதவ் 9 ரன்கள் எடுத்து சர்ப்ராசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். எனவே இந்தியா 72 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ரன் குவித்து வந்தார். 26 ஓவர்கள் முடிவில் 43 பந்துகளில் 76 ரன்களை குவித்திருந்தார். இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்திக் பாண்ட்யா 6 சிக்சர்களை விளாசி எதிரணிக்கு கிலி ஏற்படுத்தியிருந்தார். இதனால் இந்தியாவுக்கு சிறு நம்பிக்கை ஒளி தெரிந்தது. ஆனால், 27வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா அவர் 76 ரன்களோடு நடையை கட்டினார். எதிர்முனையில் நின்ற ஜடேஜா செய்த தவறால் பாண்ட்யா ரன்அவுட்டானார்.
இதையடுத்து ஜடேஜாவும் 15 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி 158 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. உலகின் பெஸ்ட் பேட்டிங் லைன் என புகழப்படும் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை பறிகொடுத்தது.
பதற்றம் எப்பேர்பட்ட திறமைசாலிகளையும் வீழ்த்திவிடும் என்பதற்கு இன்றைய இந்திய பேட்டிங் ஒரு சிறந்த உதாரணம்.