ஒலிம்பிக் ஸ்டார் லின்போர்ட் கிறிஸ்டி
ஜமைக்காவில் பிறந்த லின்போர்ட் கிறிஸ்டி இங்கிலாந்து நாட்டிற்காக பல முறை ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இருக்கிறார். 1992 பார்சிலோனவில் நடத்த ஒலிம்பிக்கில் இவர் முதல்முறையாக தங்கம் வென்றார். ஓட்டபந்தயத்தில் அப்போது தங்கம் வாங்கிய அவர் அடுத்தடுத்து அனைத்து போட்டியிலும் வென்று யாராலும் தோற்கடிக்க முடியாத புயலாக மாறினார். ஒலிம்பிக், உலக சாம்பியன், யுரோப்பியன் சாம்பியன், காமென்வெல்த் என அனைத்திலும் தங்கம் வென்ற ஒரே நபர் இவர் மட்டுமே ஆவார்.
இந்தியாவில் கால் பதித்தார்
இந்த நிலையில் தற்போது அவர் இந்தியாவுக்கு விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வந்துள்ளார். அதன்படி 'பூமா' நிறுவன ஷூக்களுக்கு இவர் 'பிராண்ட் அம்பாசிட்டராக' இருப்பார். அது குறித்த விளம்பரங்களில் நடிக்கும் அவர் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபடுவார். இதற்காக இவர் கிராமம் கிராமமாக செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கிரிக்கெட்
இந்த நிலையில் இவர் இந்தியாவின் ஒலிம்பிக் பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்தார். அதன்படி ''இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்கு கிரிக்கெட் வீரர்கள் மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறார்கள். அதனால் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு சரியான அளவில் மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஒலிம்பிக்கில் இந்தியாவின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது'' என்றார்.
கிரிக்கெட் விளையாட பயம்
இந்த நிலையில் அவர் தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்தும் பேசினார். அதில் ''நான் விராட் கோஹ்லி விளையாடுவதை பார்த்து இருக்கிறேன். அவர் தான் இங்கு பல ரசிகர்களுக்கு ஹீரோ. எனக்கு கிரிக்கெட் குறித்து கொஞ்சம் தான் தெரியும். எனக்கு கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு எல்லாம் தைரியம் கிடையாது.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இந்தியாவின் தற்போதைய நிலைமை சீக்கிரம் மாறும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.