பகலிரவு டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி கடந்த 17ம் தேதி துவங்கி நேற்றைய தினம் முடிவடைந்துள்ளது. இதில் மிகவும் மோசமான நிலையில் இந்திய அணி தோற்றுள்ளது.
குறைவான போட்டிகளில் பங்கேற்பு
கொரோனா காரணமாக சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பங்கேற்காமல் கடந்த மார்ச் மாதம் முதல் 8 மாதங்கள் விலகியிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் மோதி வருகிறது.
மூன்றிலும் தோல்வி
டி20 தொடரை ஆஸ்திரேலியாவிடம் இருந்து வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து தற்போது டெஸ்ட் தொடர் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை விளையாடியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே தழுவியுள்ளது.
2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி
இந்த ஆண்டின் துவக்கத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் இரண்டு போட்டிகளையும் இழந்தது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.
26ம் தேதி துவக்கம்
இதையடுத்து வரும் 26ம் தேதி அந்த அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி ஜெயித்தால் மட்டுமே இந்த ஆண்டில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது ஜெயித்தது என்ற நிலை உருவாகும். மாறாக அதிலும் தோற்றால், டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியிலும் ஜெயிக்கவில்லை என்ற நிலை ஏற்படும்.