தீவிரவாதிகள் இருக்கும் வரை..
அந்த கருத்துக்களுக்கு தான் மறுப்பு தெரிவித்து பேசி இருக்கிறார் சேத்தன் சவுஹான். தீவிரவாதிகளுக்கு கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் இல்லை. தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருக்கும் வரை இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட முடியாது என அதிரடியாக கூறி இருக்கிறார் அவர்.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆன இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகி விட்டது. இரு அணிகளும் 2013இல் தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் ஆடின. டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரை 2008இல் தான் கடைசி தொடரில் ஆடி உள்ளன.
எதிரணி வீரர்கள்
முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ஷாஹித் அப்ரிடி இருவரும் இந்தியா - பாகிஸ்தான் மோதிய பல இருதரப்பு தொடர்களில் எதிரணியில் ஆடியவர்கள். தற்போது இருவரும் உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறார்கள்.
யுவராஜ் சிங் - அப்ரிடி கருத்து
இவர்கள் இருவரும் ஸ்போர்ட்ஸ் 360 என்ற விளையாட்டு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மீண்டும் நடைபெறுவது பற்றி பேசி உள்ளார்கள். யுவராஜ் சிங் கூறுகையில் எங்களுக்கு எதிராக யார் ஆட வேண்டும் என நாங்கள் முடிவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம் என்றார்.
யுவராஜ் சிங் என்ன சொன்னார்?
யுவராஜ் சிங் கூறுகையில், "2004, 2006 மற்றும் 2008இல் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடியது எனக்கு நினைவு உள்ளது. ஆனால், இன்றைய நாட்களில் அந்த அளவுக்கு போட்டிகள் நடப்பதில்லை" என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.
இந்த விளையாட்டுக்கு நல்லது
மேலும், "ஆனால், இது எங்கள் கைகளில் இல்லை. நாங்கள் கிரிக்கெட் ஆடுவது, அதன் மீதான காதலுக்காக. எங்களுக்கு எதிராக எந்த அணி ஆட வேண்டும் என நாங்கள் முடிவு செய்ய முடியாது. ஆனால், அதிக இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் நடப்பது, இந்த விளையாட்டுக்கு நல்லது" என்றார் யுவராஜ் சிங்.
அப்ரிடி பேச்சு
அப்ரிடி கூறுகையில். "ஒருவேளை இந்தியா - பாகிஸ்தான் தற்போது கிரிக்கெட் ஆடினால் அது ஆஷஸ் தொடரை விட பெரிதாக இருக்கும். ஆனாலும், அது நடக்கப் போவதில்லை. இந்த விளையாட்டின் மீதான மக்களின் அன்புக்கு இடையேயும், அதன் மூலம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஆசைக்கு இடையேயும் நாம் அரசியலை நுழைய விட்டுள்ளோம்" என்றார்.
சேத்தன் சவுஹான் எதிர்ப்பு
இந்த நிலையில், இரு தரப்பு கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுஹான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "தற்சமயம், இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தக் கூடாது. ஏனெனில், இரு நாடுகளின் உறவு சிறப்பாக இல்லை" என்றார்.
நடக்க முடியாது
மேலும், "பாகிஸ்தானில் ஆடுவது நல்லதல்ல. தீவிரவாதிகளுக்கும், கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் இல்லை. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இருக்கும் வரை, இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் நடத்த முடியாது" என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார் அவர்.