இந்தியா-பாகிஸ்தான் மோதல்
இந்தியா-பாகிஸ்தான் சாதாரண தொடரில் விளையாடினாலே அனல் பறக்கும். அதுவும் உலககோப்பையில் இரு அணிகளிலும் நேருக்கு நேர் மோதினால் சொல்லவா வேண்டும். இந்த உலககோப்பையில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் வருகிற 24-ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து கசப்பான உறவு நீடிப்பதால் இரு நாடுகளும் இதுபோன்ற உலககோப்பை தொடரில்தான் நேரடியாக கிரிக்கெட்டில் மோதிக்கொள்கின்றன.
மறுபரிசீலனை செய்ய வேண்டும்
வரும் 24-ம் தேதி நடக்கும் பரபரப்புக்கு ஆட்டத்துக்காக இரு அணிகளின் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர். உலககோப்பையில் பாகிஸ்தான் இதுவரை இந்தியாவை வீழ்த்தியதில்லை என்பதால் இந்த மேட்ச் தொடர்பாக சமூகவலைதளம் இப்போதே பரபரப்பாகி விட்டது. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்துவதில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குரல் எழுப்பியுள்ளார்.
உறவு சரியில்லை
சமீப நாட்களாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவதால் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடத்தப்பட வேண்டுமா? என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர், ''இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு சரியில்லை என்பதால் இந்தப் போட்டியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.
Recommended Video
மனிதநேயத்தைக் காக்க வேண்டும்
இதே கருத்தை கூறியுள்ள பஞ்சாப் அமைச்சர் பர்கத் சிங், ''டி 20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடத்தப்படக்கூடாது, ஏனென்றால் எல்லையில் நிலைமை சரியில்லை. இரு நாடுகளும் தற்போது அழுத்தமான காலகட்டத்தில் உள்ளன. நாம் மனிதநேயத்தைக் காக்க வேண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் எதையும் செய்யக்கூடாத'' என்று அவர் கூறினார்.