நாளை மதியம்
மான்செஸ்டர் நகரின் ஓல்ட் ட்ராபோர்ட், மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மதியம் 3 மணிக்கு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்குவதாக உள்ளது. இந்த நிலையில்தான், மழையால் ஆட்டம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், அதில் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி ஒளிந்து கொண்டுள்ளது.
கைவிடப்படாது
ஆம்.. மழையால் ஆட்டம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறதே, தவிர, கைவிடப்படும் சூழ்நிலை கிடையாது. இதற்கு காரணம், அங்கு தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழ்நிலை இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுதான். மழை விட்டுவிட்டுதான் பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், இது அடை மழை போல பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கண்டிப்பாக இருநாட்டு ரசிகர்களுக்கும், இந்த தகவல் மிகப்பெரிய ஆறுதல்.
மேகமூட்டம்
வானிலை இலாகா கணிப்பை பாருங்கள், உங்களுக்கே ஒரு ஐடியா வரும்: காலை 9 மணிக்கு, 12 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும். அப்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காலை 10 மணிக்கு வெப்பம் அதே அளவில் இருக்கும். மழை இருக்காது. ஓரளவுக்கு வானம் மேக மூட்டத்தோடு காணப்படும். 11 மணிக்கு 14 டிகிரி வெயில் பதிவாகும். மழைக்கு வாய்ப்பு இருக்குமாம்.
மதியத்திற்கு மேல்
நண்பகல் 12 மணிக்கு 15 டிகிரி வெயில் இருக்கும். ஆனால் மழை விட்டு வானம் மேக மூட்டத்தோடு இருக்கும். பிறகு மதியம், 2 மணிக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாம். பின்னர், 3 மணியிலிருந்து ஓரளவுக்கு வானம் மேக மூட்டத்தோடு காணப்படும். வெப்ப நிலை 17 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
ரசிகர்களே நற்செய்தி
இவ்வாறு மழை விட்டு விட்டுதான் பெய்யும் என்பதாலும், பகல் நேர வெப்ப நிலை சீராக கூடும் என்பதாலும், இது அடை மழையாக வாய்ப்பு இல்லை. அவ்வப்போது போட்டி பாதிக்கப்படத்தான் வாய்ப்பு உள்ளது. அப்படியே பாதிக்கப்பட்டாலும், ஓவர்களை குறைத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, ஆட்டம் நடைபெறும் என்பதால், ரசிகர்கள் மனம் தளர வேண்டாம் என்பதே வருண பகவான் சொல்லும் சேதி.
பார்த்தீங்களா கதையை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், வழக்கமாக ஜூன் மாதம், இங்கிலாந்தில் இந்த அளவுக்கு மழை பெய்யாதாம். கடந்த வருடம் மாதம் முழுக்கவே 2 மி.மி மழைதான், பதிவாகியிருந்தது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தெற்கு இங்கிலாந்தில் 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எனவே, போட்டி திட்டமிடலில் எந்த பிரச்சினையும் இல்லை. கொடுக்குற கடவுள் கூரையை பிய்ச்சிகிட்டு கொடுக்க முடிவு செய்துள்ளார் என்று வேண்டுமானால் இதை எடுத்துக்கொள்ளலாம்.