கிரிக்கெட் போட்டி
கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி விவரம்: இந்தியா-பாகிஸ்தான் நடுவே கிரிக்கெட் போட்டி நடைபெற வேண்டியது அவசியம். இந்திய அரசு பலமுறை யோசித்த பிறகே விளையாட்டை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்திருக்கும். இருப்பினும் இரு அணிகள் நடுவே கிரிக்கெட் போட்டி நடைபெற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்.
பேச்சுவார்த்தை
எந்த ஒரு நாடும், விளையாட்டு துறைக்காக தனது கொள்கையை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. அப்படியிருக்கம்போது, விளையாட்டை புறக்கணிப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்பது எனது எண்ணம். எனவே பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும். பேசாமல் இருந்தால் பிரச்சினை தீராது.
ஒன்றாக கலந்து..
இரு நாடுகளும் கிரிக்கெட் விளையாடும்போது, இரு நாட்டு ரசிகர்களும் ஒரே மைதானத்தில் இணைவார்கள். அப்போது, கலந்து பேச இருநாட்டவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நட்புதான், அரசு மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரசிகர்கள் பாவம்
பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களால் தங்கள் நாயகர்கள் ஆடுவதை நேரில் பார்க்க முடியவில்லை. தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் நடப்பதில்லை. யூனிஸ்கானையும், அப்ரிடியையும் அவர்கள் தொலைக்காட்சிகளில்தான் பார்க்க வேண்டியதாக உள்ளது.
பாக். மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல வேண்டும், விளையாட வேண்டும் என்று நான் விரும்பும் அதேநேரம், நான் முன்பு சுற்றுப்பயணம் சென்றபோது நேர்ந்த ஒரு நிகழ்வை குற்றச்சாட்டாகவே கூற விரும்புகிறேன். நான் 3 முறை பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றுள்ளேன். மூன்றுமுறையும் அந்த நிகழ்வு நடந்தது.
இஞ்சி இடுப்பு
நான் முதன்முதலாக, 1978ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றபோது, எனது இடுப்பு அளவு 30 இன்ச்சுகளாக இருந்தது. ஆனால் சுற்றுப் பயணம் முடிந்தபோது, அது 32 இன்ச்சாக பெருத்துவிட்டது.
என்னே கவனிப்பு, என்னே கவனிப்பு
1982-83ம் ஆண்டில் நீண்ட ஒரு சுற்றுப் பயணத்தை பாகிஸ்தானில் மேற்கொண்டோம். அப்போது, எனது இடுப்பு சைஸ் 34 இன்ச்சாக பெருத்துவிட்டது. இதற்கெல்லாம் காரணம், பாகிஸ்தானில் எங்களுக்கு தரப்பட்ட சுவைமிகுந்த உணவுதான். எனது இடுப்பை பெருக்க வைத்ததுதான் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் மீதான தவறு. இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.
அடுத்த மாதம் போட்டி?
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, வரும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் அரபு எமிரேட்சில் வைத்து, இரு அணிகளும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும். ஆனால் இந்திய தரப்பில் மவுனம் சாதிக்கப்படுகிறது. இது பாக். கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.