பயோ பபுள்
ஐபிஎல் தொடரில் நடந்த தவறு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் மும்பையில் குவாரண்டைனில் இருக்கவுள்ளனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு நெகட்டீவ் வந்த பின்னரே இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
அறிவுறுத்தல்
இதே போல வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அதன்படி விராட் கோலி, அஸ்வின், ரஹானே, பும்ரா, இஷாந்த் சர்மா, பண்ட், சுப்மன் கில், ஜடேஜா உள்ளிட்டோர் தங்களது முதற்கட்ட தடுப்பூசியை வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் போட்டுக்கொண்டுள்ளனர்.
பிசிசிஐயின் கோரிக்கை
ஆனால் 2ம் தவனை தடுப்பூசி போடுவதில் தான் சிக்கல் நிலவி வருகிறது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால் அவர்கள் 2ம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது. எனவே அவர்களுக்கு அந்த நாட்டு அரசே தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்திருந்தது. அதற்கு நீண்ட நாட்களாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மௌனம் காத்து வந்தது.
இங்கிலாந்து அனுமதி
இந்நிலையில் பிசிசிஐ கோரிக்கைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் இந்திய வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பொறுப்பை இங்கிலாந்து ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அங்கு அந்நாட்டு சுகாதாரத்துறையின் மேற்பார்வையில் வீரர்களுக்கு 2வது தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.