முதல் போட்டி
இந்திய அணியின் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் தான் குழப்பம் நீடித்து வருகிறது. பேட்டிங் வரிசையில் 4வது இடத்திற்கு சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் இடையேயான போட்டி மற்றும் பவுலிங் தேர்வுகளில் தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் என ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
முக்கிய வீரர் கம்பேக்
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கம்பேக் கொடுக்கவுள்ளதாக துணைக்கேப்டன் பும்ரா தெரிவித்துள்ளார். 2வது டெஸ்ட் போட்டியின் போது காலில் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறிய முகமது சிராஜ் 3வது டெஸ்டில் இருந்து விலகினார். இதனால் ஒருநாள் போட்டியில் அவர் பங்கு பெறுவாரா என்ற குழப்பம் நீடித்தது. ஆனால் பும்ராவின் பதில் தற்போது ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
உடல்நிலை
இதுகுறித்து பேசிய அவர், முகமது சிராஜ் முழு உடற்தகுதியுடன் உள்ளார். எங்களுடன் தான் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரிடம் எந்தவித பிரச்சினைகளையும் நான் பார்க்கவில்லை. அவர் இடம்பெறுவார் என்று தான் நினைக்கிறேன். அணியில் அனைத்து வீரர்களுமே தற்பொது நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். இதனால் ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றங்கள் இருக்காது என நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.
ரசிகர்கள் நிம்மதி
தென்னாப்பிரிக்கா களங்களில் நன்கு வேகமும், பவுன்சர்களும் போடக்கூடிய பவுலர்களே தேவை. அந்தவகையில் இந்திய அணியில் சிராஜுக்கு அடுத்தபடியாக ஷர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சஹார் மட்டுமே உள்ளனர். அவர்களை விட முகமது சிராஜுக்கு பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் ஏற்பட்டுள்ளது.