ரோகித் 140
அணியில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 140 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக கோலி 77 ரன்களும், ராகுல் 57 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் முகமது அமிர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
338 ரன்கள் இலக்கு
337 என்ற கடின இலக்கை நோக்கி ஆடியது பாகிஸ்தான். இமாம், பகார் ஜமான் ஜோடி துவக்கம் தந்தது. தமிழகத்தின் விஜய் சங்கர் வேகத்தில் இமாம் காலியானார். குல்தீப் சுழலில் சிக்கினார் பாபர் ஆசம். ஜமான் 62 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஹபீஸ், மாலிக் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
குறுக்கிட்ட மழை
விஜய் சங்கர் பந்தில் கேப்டன் சர்பராஸ் நடையை கட்டினார். அணி 35 ஓவரில் 166 எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. 40 நிமிடங்கள் கழித்து, மீண்டும் துவங்கிய போட்டி 40 ஓவர்களாக குறைக்கப் பட்டது. டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி பாகிஸ்தானுக்கு இலக்கு 302 ரன்களாக மாற்றப்பட்டது. பாகிஸ்தான் அணி 40 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது.
தொடரும் ஆதிக்கம்
இமாத் வாசிம் 46 ரன்களுடனும், ஷாதப் கான் 20 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர், பாண்டியா, குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்த போட்டியில் வென்றதன் மூலம், உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
இதுவரை விளையாடிய 7 போட்டியிலும் இந்திய அணி, பாகிஸ்தானை வெற்றியின் பக்கம் நெருங்க விடாமல் அடித்து துரத்தி இருக்கிறது. அதாவது இந்தியா 7, பாக் 0 என்ற அடிப்படையில் வெற்றி விகிதம் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றி பெற்றதை உலகம் எங்கும் உள்ள ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தொடரும் வரலாறு
போட்டி நடைபெறும் சில மணி நேரங்கள் வரை மழை அச்சுறுத்தியதால்... அனைவரும் போட்டியின் நிலைமை என்னாகுமோ என்று கவலைப்பட்டனர். ஆனால்... அந்த கவலைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக தூக்கி சாப்பிட்டிருக்கிறது இந்திய அணியின் வெற்றியால்.... இனி உலக கோப்பையில் இந்தியாவை வென்றதில்லை பாக். என்ற வரலாறு இம்முறையும் தொடர்கிறது.