ரத்தானால் கஷ்டம்
இந்தியா தனது டூரை ரத்து செய்தால் ஆஸ்திரேலியா அணியின் நிலைமை அதோ கதியாகி விடும். அதாவது பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். காரணம் ஏற்கனவே கொரோனாவால் போட்டிகள் ரத்தாகி விட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாம். வீரர்களுக்கு சம்பளத்தைக் குறைக்கப் போகிறார்களாம். இந்திய அணியின் வருகையை வைத்துத்தான் நாலு காசு சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.
நிதி நிலைமை மோசம்
இதுகுறித்து டிம் பெயின் கூறுகையில், இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரை ரத்து செய்யாமல் விளையாடினால் நன்றாக இருக்கும். காரணம் இதன் மூலம் 250 முதல் 300 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு நல்லது. அதன் நிதி நிலைமைக்கு இது மிகவும் அவசியமும் ஆகும். எனவே இந்திய அணியின் வருகை முக்கியமானது. இதை இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சரியாகும் என்று நம்பிக்கை
விரைவில் பிரச்சினைகள் சரியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இந்தத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ரசிகர்களுக்கு அது பெரும் விருந்தாக அமையும். இரு அணிகளும் நல்ல பலத்துடன் கூடியவை. எனவே சிறப்பான கிரிக்கெட்டை ரசிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று இரு தரப்பும் ஆலோசித்துக் கொண்டுள்ளன என்று நம்புகிறேன் என்று பெயின் கூறியுள்ளார்..
தனி விமானத்தில் வரலாம்
தனி விமானம் மூலம் இந்திய அணியினரை இங்கு வரவழைக்கலாம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கலாம். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இந்திய அணியினர் மற்றும் ஆஸ்திரேலிய அணியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இதனால் போட்டியும் தடைபடாமல் நடக்க முடியும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நிலைமை அனைவருக்கும் தெரியும். எனவே ஊதியம் குறைக்கப்பட்டால் நாங்கள் அதை பெரிதுபடுத்த மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலைமை சரியாகட்டும்
தற்போதைய நிலையை அனைத்து வீரர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். பணம் பணம் என்று நாங்கள் நிச்சயம் அலைய மாட்டோம். நிதி நிலைமை விரைவில் சரியாகும் என்று நம்புகிறோம். எல்லோருடைய வாழ்வாதாரமும் கிரிக்கெட்டை நம்பித்தான் உள்ளது. எனவே கிரிக்கெட் நன்றாக இருந்தால் நாங்களும் நன்றாக இருப்போம் என்றார் அவர். கடந்த முறை இந்தியா, ஆஸ்திரேலியாவுக்குப் போயிருந்தபோதுதான முதல் முறையாக அந்த நாட்டில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது என்பது நினைவிருக்கலாம்.