தோனியின் வளர்ப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் வழிகாட்டுதலில் அறிமுகமான ருதுராஜ் கெயிக்வாட், கடந்த சீசனில் விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் அவர் மீது தோனி வைத்த நம்பிக்கையோ என்னவோ, 2021ம் ஆண்டு ஐபிஎல்-ல் காட்டடி அடித்தார். ஒவ்வொரு போட்டியிலும் ரன் வேட்டை நடத்திய இவர் 2021ம் ஆண்டு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த பெருமையை பெரும் இளம் வீரர் இவரே ஆகும்.
ஐபிஎல் தொடரில் தான் கலக்குகிறார் என்று பார்த்தால் சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரேவில் தொடர்ச்சியாக 4 சதங்களை தெறிக்கவிட்டு மிரட்டினார். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே அவரை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.
அடுத்த ஃபினிஷர் இவர்தான்
2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் கொல்கத்தா அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஆனால் வெங்கடேஷ் ஐயர் என்ற இளம் வீரர் ஒருவர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தினார். "எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா" என்பது போல மற்ற அணி வீரர்கள் திணறினர். இதனால் அந்த அணி ப்ளே ஆஃப் வரை அழைத்து வர முக்கிய காரணமாக அமைந்தார்.
நல்ல ஃபினிஷராக இவர் வருவார் என அனைவரும் அழைத்த நிலையில், தான் ஒரு ஆல் ரவுண்டர்யா என்பதை விஜய் ஹசாரேவில் காட்டியுள்ளார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு மாற்று வீரர் கிடைப்பது கடினம் என பேச்சுக்கள் இருந்தன. ஆனால் அந்த ரோலுக்கு சரியான தேர்வாக அமைந்துள்ளார் வெங்கடேஷ் ஐயர். இதனால் வரும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் வெங்கடேஷ் தான் ஃபினிஷராக இருப்பார் எனத்தெரிகிறது.
காஷ்மீர் சிறுத்தை
இர்ஃபான் பதானின் பட்டை தீட்டுதலில் உருவான ஜம்மு காஷ்மீர் இளம் வீரர் உம்ரான் மாலிக், சன் ரைசர்ஸ் அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்றிருந்தார். டி. நடராஜன் கொரோனா உறுதியான போது, அவருக்கு மாற்று வீரராக உம்ரான் மாலிக் களமிறக்கப்பட்டார். தனது முதல் ஆட்டத்திலேயே உம்ரான் மாலிக் 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசி கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களை திணறவி்ட்டார். அதன்பின்னர் ஆர்சிபிக்கு எதிராக ஒரே ஓவரில் தொடர்ச்சியாக நான்கு 150+ கி.மீ டெலிவரிக்களை வீசியிருந்தார்.
உம்ரான் மாலிக் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கே பேட்ஸ்மேன்கள் அஞ்சுவதாக சில பேச்சுக்கள் எழுந்தது. இதன் காரணமாக அவருக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் வலைப்பயிற்சி பவுலராக வாய்ப்பு கொடுத்தது பிசிசிஐ. இவ்வளவு வேகத்தில் பந்துவீசக்கூடிய வீரர் இருப்பது இந்தியாவின் பலம் என்றும், அவருக்கு அடுத்தடுத்த தொடர்களில் பெரும் எதிர்காலம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டெத் ஓவர் ஸ்பெஷல்
ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளும் அணி பஞ்சாப் கிங்ஸ். ஆனால் அதிலேயே முட்டி மோதி தனக்கான நிலையான இடத்தை அர்ஷ்தீப் பிடித்திருந்தார். அவர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 18 விக்கெட்களை தான் எடுத்திருந்தார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்திருந்தார்.
இவரின் விக்கெட்கள் கணக்கை விட, டெத் ஓவர்களில் ரன் வேகத்தை கட்டுப்படுத்தக்கூடிய முக்கிய பவுலராக பார்க்கப்படுகிறார். இந்த சீசனில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் செய்துக்கொண்டிருந்தார். அப்படிபட்ட சூழலில் அவரை சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தார் அர்ஷ்தீப். இதனால் அவருக்கு 2022ம் ஆண்டில் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.