வெற்றிக்கு காரணம்
இந்திய அணியில் தற்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 5 பேரும் இணைந்து இந்திய பௌலிங்கை சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் பல்வேறு வெற்றிகளை இந்தியா குவிக்க காரணமாகவும் உள்ளனர்.
பேக்கேஜ் போல அமைந்துள்ளனர்
இதனிடையே உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணியில் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் பேக்கேஜ் போல அமைந்திருப்பது இதுவே முதல்முறை என்று இந்திய அணியின் முன்னணி பௌலர் முகமது ஷமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதை உலக அளவில் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நழுவும் இந்திய கேப்டன்
இதனால் கேப்டன் விராட் கோலியை தாங்கள் அனைவரும் அவ்வப்போது சூழ்ந்துக் கொண்டு, தங்களில் முதலில் யாருக்கு பௌலிங் கொடுப்பீர்கள் என்று கேட்போம் என்றும், அவர், தன்னை ஆளை விடுங்கள் என்றும், இதிலெல்லாம் என்னை இழுக்காதீர்கள் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று நழுவிவிடுவார் என்றும் முகமது ஷமி, அணியின் நகைச்சுவை தருணங்களை பகிர்ந்து கொண்டார்.
முகமது ஷமியின் சூட்சுமம்
அணியின் முக்கிய பௌலராக விளங்கிவரும் முகமது ஷமி, 49 டெஸ்ட் போட்டிகள், 77 ஒருநாள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடி 336 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். சிறப்பாக விளையாடும் எதிரணி பேட்ஸ்மேனின் ரன்களை குறைத்து, அவரை மனதளவில் தடுமாற செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்று ஷமி தன்னுடைய வெற்றி சூட்சுமத்தை பகிர்ந்துள்ளார்.
ஷமியின் சிறப்பான ஆட்டம்
ஷமியை இரண்டாவது இன்னிங்ஸ் ஷமி என்ற பட்டப்பெயருடன் ரசிகர்கள் அழைக்கின்றனர். இதற்கு காரணம் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா வெற்றி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில், ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.