வெற்றி பயணம்
இந்திய அணி பல்வேறு புதுமுக வீரர்களை இலங்கை சுற்றுப்பயணத்திற்கு அழைத்து சென்றிருந்தாலும், சர்வதேச போட்டிகளில் அனுபவம் பெற்ற வீரர்களே முதல் 2 போட்டிகளில் களமிறக்கப்பட்டனர். புதிதாக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டனர். எனினும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அவர்கள் இருவருமே அரைசதம் விளாசி அசத்தியுள்ளனர்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டதால், 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் புதுமுக வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத்தெரிகிறது. அதன்படி அணியில் இன்னும் 9 வீரர்கள் வாய்ப்புக்காக காத்துள்ளனர். அவர்களில் யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து கணிக்கப்பட்டுள்ளது.
தொடக்க வீரர்கள்
ஓப்பனிங்கை பொறுத்தவரை பிரித்வி ஷாவை தவிர்த்து ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் தேவ்தத் பட்டிக்கல் ஆகியோர் காத்துள்ளனர். எனவே இந்த முறை தவானுடன், இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் களமிறங்குவார் எனத்தெரிகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் தேவ்தத் பட்டிக்கல் நல்ல ஃபார்மில் இருந்ததால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது. முதல் விக்கெட்டிற்கு இளம் வீரர் இஷான் கிஷானே மீண்டும் களமிறங்கலாம்.
மிடில் ஆர்டர் என்ன
மிடில் ஆர்டரில் இந்த முறை மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜொலிக்கலாம். இவருக்கு அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 3வது விக்கெட்டிற்கு களமிறங்குவார். ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை மீண்டும் பாண்ட்யா சகோதரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவுலிங்
பந்துவீச்சை பொறுத்தவரை யுவேந்திர சாஹல் கடந்த 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதால், 3வது போட்டியில் ஓய்வு கொடுக்கப்படலாம் என தெரிகிறது. அவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் அறிமுகப்படுத்த டிராவிட் திட்டமிட்டு வருகிறார்.
எந்தெந்த வீரர்கள்
ஷிகர் தவான், தேவ்தத் பட்டிக்கல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர், குல்தீப் யாதவ்