3:3 ரேஷியோ
இந்நிலையில், இரண்டாம் கட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது ஜுலை 2021 முதல் 2023 வரை அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த 2021 - 2023 டெஸ்ட் தொடரில், ஒவ்வொரு அணியும் உள்நாட்டில் மூன்று முறையும், வெளிநாடுகளில் மூன்று முறையும் விளையாடியிருக்க வேண்டும். இதில் அதிக வெற்றிகளைப் பெற்று, அதிக புள்ளிகளைப் பெறும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் நுழையும்.
2 வெற்றி மட்டுமே
இதில், இந்திய அணிக்கு முதல் தொடரே வெளிநாட்டு தொடர் தான். ஆம்! இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்தை அதன் மண்ணில் வீழ்த்துவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் ஆசிய அணிகள் இங்கு படும் அவஸ்தைகளை பார்த்தால் கண்ணீர் வடிக்கத் தோன்றும். எனினும், இந்தியா இங்கு ஓரளவுக்கு சர்வைவ் செய்வது வழக்கம். கடந்த 2014 முதல் இப்போது வரை இதுவரை இங்கிலாந்தில் இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகளை மட்டுமே இந்திய அணி வென்றிருக்கிறது. ஒன்று தோனி தலைமையில் 2014ம் ஆண்டில், மற்றொன்று கோலி தலைமையில் 2018ம் ஆண்டில்.. இது தான் அணியின் நிலவரம்.
திருப்பிக் கொடுக்க தயாரா?
இந்த சூழலில் தான், இங்கிலாந்தை இப்போது மீண்டும் எதிர்கொள்கிறது இந்திய அணி. ஏற்கனவே, இரு வாரங்களுக்கு முன்பு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என்று கோப்பையை இழந்திருக்கும் இங்கிலாந்து அணி, இந்தியாவை வச்சு செய்ய எதிர்நோக்கி காத்திருக்கும். குறிப்பாக, இந்தாண்டு தொடக்கத்தில், இந்திய மண்ணில் வைத்து 3-1 என்று அடித்து துவைத்து அனுப்பப்பட்டதால் திருப்பி கொடுக்க தயாராக இருக்கும்.
வட்டியும் முதலுமாக
இதன் பிறகு நவம்பரில் நியூசிலாந்து செல்லும் இந்திய அணி 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இது, உலக டெஸ்ட் ஃபைனலில் தோற்றதற்கு, நியூசிலாந்துக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க இந்தியாவுக்கான சரியான வாய்ப்பு எனலாம். இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனினும், உலகக் கோப்பை டி20 தொடருக்கு பிறகு, இந்த டெஸ்ட் சீரிஸ் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் சவால்
இத்தொடருக்கு பிறகு விராட் கோலி படை, தென்னாப்பிரிக்காவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொடர் டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரையிலான காலக்கட்டத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. இதன் பிறகு, இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கையுடன் இந்திய அணி மோதும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2022ம் ஆண்டின் பிற்பகுதியில் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் என்று தெரிகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் தொடரை அடுத்தடுத்து இரு முறை இந்தியா கைப்பற்றி இருக்கும் நிலையில், அடுத்த தொடர் இந்தியாவிலேயே நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடும் என்று தெரிகிறது.