யூஏஇயிலிருந்து நேரடி பயணம்
கடந்த 5 மாதங்களாக கொரோனா பாதிப்பால் சர்வதேச போட்டிகளை மேற்கொள்ளாத பிசிசிஐ, தற்போது ஐபிஎல் போட்டிகளை நடத்த உள்ளது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடருக்கு திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை முடித்துக்கொண்டு இந்திய அணியினர் நேரிடையாக ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டு இதில் விளையாட உள்ளனர்.
தளர்வு ஏற்படுத்த முடியாது
அடுத்தடுத்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இரு அணிகளும் மோதவுள்ளன. யூஏஇயிலிருந்து பெர்த் வழியாக செல்லும் இந்திய அணியினரை அங்கேயே குவாரன்டைனுடன் கூடிய பயிற்சி ஆட்டங்களில் விளையாட வைக்கவும் போட்டிகளை நடத்தவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவு செய்திருந்தது. ஆனால் மேற்கு ஆஸ்திரேலிய மாவட்டமான பெர்த் தன்னுடைய கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.
புதிய அட்டவணை வெளியீடு
குவாரன்டைனுடன் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்க பிசிசிஐ கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பெர்த் நிர்வாகத்தின் கறார் போக்கால் போட்டிகள் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. தற்போது அடிலெய்ட் அல்லது பிரிஸ்பேனில் இந்த தொடரின் போட்டிகளை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய அட்டவணை வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இந்திய அணிவீரர்கள் திட்டம்
யூஏஇயில் ஐபிஎல் போட்டிகளை முடித்துக் கொண்டு, இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றடைய உள்ளனர். இதையடுத்து அவர்கள் குவாரன்டைன் மற்றும் பயிற்சி ஆட்டங்களை முடித்துக் கொண்டு, டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரிலும் ஒரு பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.