10 விக்கெட்டுகளில் தோல்வி
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. தொடர்ந்து சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றி முகத்தை மட்டுமே காட்டி ரசிகர்களை மிகுந்த களிப்பிற்கு உள்ளாக்கியிருந்த இந்திய அணி தற்போது தோல்வி முகத்தை காட்டியுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ரசிகர்கள் காட்டம்
பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்ற இந்த முதல் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய வீரர்கள், பெரிதும் மெனக்கெடாமல், தங்களது ஆட்டத்தை ஆடினர். காற்று, பிட்ச் என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும், நியூசிலாந்து அணியின் 348 ரன்களுக்கு முன்பு இந்தியா அடித்த 165 மற்றும் 191 ரன்கள் எடுபடாமல் போனது.
கபில்தேவ் கேள்வி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 360 புள்ளிகளை எடுத்துள்ள இந்திய அணி வீரர்கள், டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ள நிலையில், நியூசிலாந்துடன் ஆடிய இரண்டு இன்னிங்சிலும் ஒரு போட்டியில்கூட 200 ரன்களை எடுக்கவில்லை என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மனும் இந்தியாவின் ஆட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
132 ரன்களை குவித்த இறுதி 3 விக்கெட்டுகள்
சிறப்பான பந்துவீச்சு மூலம் இந்தியாவை சொற்ப ரன்களில் வெளியேற்றிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களை குவித்த நிலையில், ராஸ் டெய்லர் 44 ரன்களும், கிராண்ட்ஹோம் 43 ரன்களும் கைல் ஜாமீசன் 44 ரன்களும் டிரெண்ட் போல்ட் 38 ரன்களும் விளாசி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 183 ரன்கள் முன்னிலை வகித்தனர்.
பேட்ஸ்மேன்களும் சொதப்ப சளைக்கவில்லை
சொந்தமண்ணில் தங்களது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தும் இந்திய பௌலர்கள், வெளிநாடுகளில் திணறித்தான் போகிறார்கள். இந்த போட்டியிலும் எதிரணி வீரர்களை அவுட் ஆக்குவதற்கு இந்திய பௌலர்கள் பிரம்ம பிரயத்தனம் பட்டார்கள். அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்னும்படியாக பேட்ஸ்மேன்களின் ஆட்டம் இருந்தது. 2வது இன்னிங்சில் ஓரளவிற்கு டீசண்டான 148 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இந்திய அணி, அடுத்ததாக 47 ரன்களுக்கு மற்ற 6 விக்கெட்டுகளை இழந்தது.
2018க்கு பிறகு தற்போதைய தோல்வி
கடந்த 2018ல் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்ற இந்தியா, அதையடுத்து தற்போதுதான் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியாவின் முதல் தோல்வி இது. தொடர்ந்து வெற்றிகளை ரசிகர்களுக்கு பரிசளித்த இந்தியா, தற்போது தோல்வியை கொடுத்துள்ளதைய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை.
முந்தைய தோல்விகள்
கேப்டன் விராட் கோலி தலைமையில் வெற்றிகளை அதிகளவில் இந்திய அணி சந்தித்துள்ள நிலையில், தோல்விகளும் இல்லாமல் இல்லை என்பதே உண்மையான நிலை. விளையாட்டில் வெற்றி தோல்விகள் சகஜம் என்பதை உணர்ந்து, ரசிகர்கள் இந்திய அணிக்கு போதுமான ஆதரவை எப்போதும் வழங்க தயாராக இருக்க வேண்டும். விளையாட்டை விளையாட்டாக பார்க்கும் மனோபாவம் வேண்டும் என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
சந்திமாலின் வெறித்தனம்
கடந்த 2015ல் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதிய இந்தியா முதல் போட்டியை தோல்வியுடன் நிறைவடைய செய்யவே மிகவும் திணறியது. ஆரம்பத்தில் இந்திய அணியின் பக்கம் இருந்த வெற்றி, இலங்கை வீரர் தினேஷ் சந்திமாலின் வெறித்தனமான ஆட்டத்தால் அப்படியே இலங்கைவசம் திரும்பியது.
சந்திமாலின் சிறப்பான ஆட்டம்
3வது நாளின் துவக்கத்திலேயே நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி விளையாடிய இலங்கை வீரர் சந்திமால், லஞ்ச் மற்றும் தேநீர் இடையிலேயே 28 ஓவர்களில் 88 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை 155க்கு உயர்த்தினார். தொடர்ந்து தேநீருக்கு பிறகு அணியின் ஸ்கோர் மேலும் 104 உயரவும் காரணமாக இருந்தார்.
வெற்றிக்கு வழிவகுத்த சந்திமால்
சிறப்பான, தரமான ஆட்டத்தை தந்த சந்திமாலை வீழ்த்த முயன்ற இந்திய வீரர்களின் முயற்சி வீணானது. 19 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸ்களுடன் டெஸ்ட் போட்டி என்பதையே மறந்து 169 பந்துகளில் 162 ரன்களை அவர் அடித்திருந்தார். தொடர்ந்து ஆடிய இந்திய அணியை தனது பந்துவீச்சால் ரங்கனா ஹெராத் வீழ்த்தி தனது அணியின் வெற்றிக்கு காரணமானார். இலங்கை 63 ரன்களில்வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மண்ணை கவ்வினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிக் கொண்டு, இந்தியா தொடரை 2க்கு 1 என்ற வித்தியாசத்தில் கைகொண்டது.
333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
கடந்த 2017ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் பூனாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 333 ரன்களில் தோல்வி அடைந்தது. விராட் கோலி தலைமையில் அதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் 11 வெற்றிகளை குவித்திருந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா மரண அடி கொடுத்தது. இதுபோன்ற கேவலமான தோல்வியை இந்தியா சந்தித்ததில்லை என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் விமர்சித்திருந்தார்.
75 ஓவர்களில் சுருண்ட இந்தியா
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த போட்டியில் இந்தியா, முதல் இன்னிங்சில் 105 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 107 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இந்தியா. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 75 ஓவர்கள் மட்டுமே இந்திய வீரர்கள் ஆடியிருந்தனர். எதிரணி பௌலர் ஓ கீஃப் இரண்டு இன்னிங்சிலும் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 12 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
முதல் போட்டியில் தோற்றாலும், இந்த தொடரையும் 2க்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா வென்றது.
வெற்றியுடன் துவங்கி தோல்வி
இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2018ல் லார்ட்சில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது இந்தியா. ஆனால் அதே ஆட்டத்தை இரண்டாவது போட்டியிலும் தருவார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு தரைமட்டமானது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நடைபெற்றது போலவே, அந்த டெஸ்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி மற்றும் டாஸ் தோல்வியும் போட்டியின் தோல்விக்கு காரணமானது.
இன்னிங்ஸ், 157 ரன்களில் வெற்றி
இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பலான ஆட்டத்தையே இந்தியா அளித்தது. இரண்டு இன்னிங்சிலும் முறையே 107 மற்றும் 130 ரன்களில் இந்தியா சுருண்ட நிலையில், முதல் இன்னிங்சிலேயே இங்கிலாந்து 396 ரன்களை குவித்தது. இதன்மூலம் முதல் இன்னிங்சில் 287 ரன்களை இங்கிலாந்து கூடுதலாக எடுத்திருந்தது. இதையடுத்து ஆடிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சரிய, இன்னிங்ஸ் மற்றும் 157 ரன்களுடன் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
3க்கு 2 என்ற கணக்கில் தோல்வி
இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வெறும் 170.3 ஓவர்களில் இந்தியா சுருண்டது. இதன்மூலம் இங்கிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளில் மிகவும் குறுகிய ஓவர்களில் முடிந்த 3வது போட்டி என்ற பெயரை இந்த போட்டி அடைந்தது. இதையடுத்த 3வது போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி கண்டு 3க்கு 2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
சகஜமாக எடுக்க வேண்டுகோள்
நிலைமை இவ்வாறு இருக்க இந்தியா தற்போது தான் மோசமான தோல்வியை பெற்றுள்ளதாக சமூகவலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் ஆவேசமடைந்து வருகின்றனர். வெற்றியை பெறும்போது அதிக கொண்டாட்டத்தில் இந்திய வீரர்களை நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம். அதேபோல தோல்வி அடைந்தாலும், அவர்களுக்கு உலகமகா கௌரவத்தை வார்த்தைகளால் அளிக்கிறோம். இவ்வாறு இல்லாமல் வெற்றி தோல்விகளை சகஜமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே விமர்சகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.