இங்கிலாந்து தொடர்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் டி20 தொடர் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன்னர் நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் இந்திய அணிக்கு இந்த டி20 தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து வியூகம்
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் ஆயத்தமாகி வருகிறது. இதுகுறித்து பேசிய இங்கிலாந்து வீரர்கள், மோர்கன், பட்லர் ஆகியோர் வரும் உலகக்கோப்பையை தொகுத்து வழங்கும் இந்திய அணி மீதுதான் எங்களின் முதல் பார்வை இருக்கும். ஏனென்றால் இந்திய அணி அனைத்து வடிவ போட்டிகளிலும் அசத்தி வருகிறது என தெரிவித்திருந்தனர்.
கோலியின் ஸ்கெட்ச்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விராட் கோலி, சர்வதேச டி20 புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி தான் உலகக்கோப்பையில் எங்களது முதல் டார்கெட்டாக இருக்கும். பல அணிகளும் பலத்துடன் களமிறங்கவுள்ளது. எனினும் இங்கிலாந்து அணிதான் தனிகவனம் செலுத்தி வீழ்த்த வேண்டிய அணி என தெரிவித்துள்ளார்.
முக்கியத்துவம்
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் இங்கிலாந்து - இந்தியா அணிகள் சர்வதேச அளவில் மோதும் டி20 போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரு அணி கேப்டன்களும் இவ்வாறு தெரிவித்திருப்பதால் இன்று தொடங்கவிருக்கும் டி20 தொடர் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.