பிசிசிஐ மௌனம்
இலங்கை கிரிக்கெட் போர்டு கடும் நிதி சிக்கலில் இருக்கும் நிலையில், இந்தியா மீண்டும் ஆகஸ்டில் இந்த தொடரில் ஆட ஒப்புக் கொள்ளுமா? என ஆர்வத்துடன் காத்துக் கொண்டு உள்ளது. ஆனால், பிசிசிஐ மௌனம் காத்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எந்த சர்வதேச கிரிக்கெட்டி போட்டியும் மார்ச் 13 முதல் இதுவரை நடைபெறவில்லை. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை தொடர்
இந்த நிலையில், ஜூன் மாதம் இந்திய அணி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருந்தது. ஆனால், கொரோனா வைரஸுக்கு மத்தியில் இந்த தொடர் நடக்க சாத்தியமில்லை என்றே கருதப்பட்டது.
தொடர் ரத்து
இலங்கை கிரிக்கெட் போர்டு தற்போது இந்த இரு தொடர்களையும் தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நிலவும் அசாதாரண சூழலில் தங்களால் இந்த தொடரில் பங்கேற்க முடியாது என பிசிசிஐ தெரிவித்ததாக இலங்கை கிரிக்கெட் போர்டு அந்த அறிவிப்பில் கூறி உள்ளது,
பயிற்சி அவசியம்
இந்திய அணி வீரர்கள் கடந்த மூன்று மாதங்களாக வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். அவர்கள் மீண்டும் கிரிக்கெட் ஆட வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு, மூன்று மாதங்கள் பயிற்சி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பயிற்சி செய்யவும் இப்போது இந்தியாவில் ஏற்ற சூழல் நிலவவில்லை.
பாதிப்பு அதிகம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது, உலகில் நான்காவது அதிக பாதிப்பு ஏற்பட்ட நாடாக இந்தியா மாறி உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதும் எளிதல்ல.
ஆகஸ்டில் நடக்க வாய்ப்பு
எனவேதான், இலங்கை சுற்றுப்பயணத்துக்கு பிசிசிஐ ஒப்புக் கொள்ளவில்லை. இந்த தொடரை ஆகஸ்ட் மாதம் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் அமைப்புகளும் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பிசிசிஐ இந்த தொடரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை எனவும். ஐபிஎல் தொடரை நடத்தவே அதிக ஆர்வத்துடன் இருப்பதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது. அதுவே பிசிசிஐ மௌனத்துக்கு காரணமாக இருக்கலாம்.
நிதி சிக்கல்
இலங்கை கிரிக்கெட் போர்டு கடும் நிதி சிக்கலில் உள்ளது. தொலைக்காட்சி உரிமையை கூட விற்க முடியாத நிலையில் தான் இலங்கை கிரிக்கெட் போர்டு உள்ளது. இந்திய அணி போன்ற பெரிய அணியுடன் கிரிக்கெட் தொடரில் ஆடினால் மட்டுமே அவர்களது நிதி நிலைமை ஓரளவு சீராகும்.
ஐபிஎல் நடத்த இலங்கை அழைப்பு
ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்த இலங்கை கிரிக்கெட் போர்டு அழைப்பு விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்த ஆயத்தமாகி வரும் நிலையில், இலங்கையில் ஐபிஎல் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.