கொரோனா உறுதி
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜூலை 13ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் இலங்கை அணியில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபளவர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இலங்கை அணி கடைசியாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தது. அந்த தொடரின் போது கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கும் எனக்கூறப்படுகிறது.
போட்டிகள் ஒத்திவைப்பு
இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானதால் அணி மொத்தமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கையாக இருந்த இலங்கை கிரிக்கெட் வாரியம், இரண்டாவதாக ஒரு அணியை உருவாக்கி ஹோட்டல் அறையில் பபுளில் வைத்துள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் இடையேயான தொடர் ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
மீண்டும் மாற்றம்
இந்நிலையில் இந்த தொடரில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை போட்டிகளுக்கான நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது 2.30 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல டி20 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது இரவு 7 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பம் நீடிப்பு
போட்டி நேரங்கள் மாற்றப்பட்டாலும், போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இலங்கை வாரியம் உருவாக்கிய 2வது அணியிலும் தற்போது ஒரு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி போட்டிகள் நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.