2 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் இன்றைய தினம் முதல் போட்டியுடன் துவங்கியுள்ளது. இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்களை எடுத்துள்ளது. இந்த போட்டியின்முலம் இந்திய மண்ணில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முடங்கிய வீரர்கள்
கொரோனா காரணமாக கடந்த ஆண்டில் 6 மாதங்களுக்கு மேல் வீடுகளில் முடங்கியிருந்த இந்திய வீரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐபிஎல் 2020 தொடருக்காக யூஏஇ பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 3 வடிவங்களில் ஆன தொடர்களிலும் பங்கேற்று விளையாடினர்.
அடுத்தடுத்த பயோ பபள்
இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் தொடர்ந்து விளையாடவுள்ளனர். ஏப்ரல் -மே மாதங்களில் ஐபிஎல் 2021 தொடரில் விளையாடவுள்ளனர். ஆண்டின் இறுதியில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்களில் வித்தியாசமான பயோ பபள் முறைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மனசோர்வை அளிக்கும்
இந்நிலையில் பயோ பபள் முறைகளில் தொடர்ந்து ஈடுபடுவது மனச்சோர்வை அளிக்கும் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். குவாரன்டைன்கள், பயோ பபள் முறைகள் மற்றும் தொடர்ந்த போட்டிகள் இந்திய வீரர்களுக்கு சோர்வை அளிக்கும் என்பதால் ஐபிஎல் 2021 தொடர் முடிந்தவுடன் அவர்களுக்கு சில வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சிறப்பான கூட்டணி
நாம் அனைவரும் மனிதர்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு தொடரும் அதேபோல ஒவ்வொரு வடிவமும் மிகவும் முக்கியமானது என்றும் தற்போதைய வெற்றிக் கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளதாகவும் சிறப்பாக செயல்படுவதற்கான தாகம் அணியில் அதிகமாக உள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.