மோசமான தோல்வி
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன போது, ஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் இந்தியா மீது பரிதாபம் அடைந்தது. இந்தியா இந்த தொடரை மோசமாக இழக்கப் போகிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் உச்சு கொட்டினார்கள்.
அதிர்ச்சி
ஆனால், இந்தியா அடுத்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து ஆஸ்திரேலியா மீளும் முன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை டிராவாக மாற்றி அதிர வைத்தது.
வெற்றி
அந்த நம்பிக்கையுடன் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி, கடைசி நாளில் 329 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடியது. அனைவரும் இந்திய அணி டிரா செய்யும் என எண்ணிய நிலையில், ஷுப்மன் கில், பண்ட், வாஷிங்க்டன் சுந்தர் உள்ளிட்ட இளம் வீரர்கள் இலக்கை எட்டச் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
புகைச்சல்
இந்த எதிர்பாராத தோல்வியால் ஆஸ்திரேலியா கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணியில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், வீரர்கள் மத்தியில் புகைச்சல் எழுந்துள்ளது.
வீரர்கள் என்ன சொல்கிறார்கள்?
வீரர்களின் செயல்பாடுகள் குறித்து வெளியே விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில், அணிக்குள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் குறித்து வீரர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. லாங்கர் தன் தனிப்பட்ட அழுத்தத்தை வீரர்கள் மீது காட்டுவதாகவும், தங்களை கட்டுப்படுத்த முயல்வதாகவும் அவர்கள் கூறத் துவங்கி உள்ளனர்.
அடுத்து என்ன நடக்கும்?
இந்திய அணியின் வெற்றி ஆஸ்திரேலிய அணியின் ஆணி வேரை அசைத்துப் பார்த்துள்ளது என்பதே உண்மை. தென்னாப்பிரிக்க தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களுடன் பயிற்சியாளர் இணக்கமாக இருப்பதை உறுதி செய்யவில்லை என்றால், விரைவில் ஆஸ்திரேலிய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் நடக்கக் கூடும்.