தினேஷ் பொறுப்பாக ஆடினார்
கடந்த வருடத்தில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டார். அரைசதம், சதம் என பெரிய அளவில் ரன்கள் குவிக்காவிட்டாலும், அணிக்கு தேவையான கடைசி ஓவர்களிலும், மற்ற விக்கெட்கள் வேகமாக சரிந்த போதும் பொறுப்பாக ஆடினார்.
வாய்ப்பு மறுக்கப்பட்டது
அவருக்கு கடைசியாக நடந்த நியூசிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் வரையிலும் வாய்ப்பு வழங்கிவிட்டு, உலகக்கோப்பைக்கு முன்பு கடைசியாக நடைபெறும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மேலே கொண்டு வரும் முயற்சி
இதனால், தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய மாட்டார்கள். ரிஷப் பண்ட்டை மேலே கொண்டு வரவே இந்த முயற்சி என ரசிகர்கள் பரவலாக பேசி வருகிறார்கள்.
தேர்வுக் குழு நிலை
எனினும், தேர்வுக் குழு தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் - தினேஷ் இருவரில் ஒருவரை தேர்வு செய்வோம். அது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்றே கூறி வருகிறது.
தடுமாறும் ரிஷப்
இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொடரில் ரிஷப் பண்ட் தனக்கு கிடைத்த வாய்ப்பில் பெரிதாக ரன் குவிக்கவில்லை. விக்கெட் கீப்பிங்கிலும் இளம் வீரரான அவர், சற்றே தடுமாறி வருகிறார்.
20 ஆண்டுகள் அனுபவம்
இந்நிலையில், தினேஷ் கார்த்திக் மட்டுமே தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக இருக்க தகுதியான வீரர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், தினேஷ் கார்த்திக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட விக்கெட் கீப்பர். இன்னமும், தன் உடற்தகுதியை சரியான நிலையில் வைத்துள்ளார்.
பொறுப்பான வீரர் தினேஷ்
பேட்டிங்கை பொறுத்தவரை பொறுப்பான வீரர், பினிஷர் என்றால் இருவரில் தினேஷ் கார்த்திக் தான் சரியான நபர். அதை பல போட்டிகளில் தினேஷ் கார்த்திக் நிரூபித்துள்ளார்.
பொறுப்பு இல்லை
ரிஷப் பண்ட் சில போட்டிகளில் அதிரடியாக ஆடினாரே தவிர, இதுவரை பொறுப்பாக பேட்டிங் செய்தார் என கூற முடியாத நிலையே உள்ளது. பல முறை அவசரப்பட்டு தூக்கி அடித்து ஆட்டமிழந்து சென்றுள்ளார். ரிஷப் பண்ட் ஆட்டத்தின் சூழ்நிலை உணர்ந்து ஆடுவது இல்லை என்ற புகாரும் உள்ளது.
அரசியல் தான்
ஒருவேளை, ரிஷப் பண்ட்டை, தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்தால், அது தினேஷ் கார்த்திக்குக்கு எதிரான "அரசியல்" என்பதை எல்லோருமே ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.