ரோஹித் - தோனி ஜோடி
முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் எடுத்தது, அடுத்து ஆடிய இந்திய அணி 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 4 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்த போது ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ரோஹித் சர்மா இணைந்து 137 ரன்கள் குவித்து அணியை ஓரளவு மீட்டனர்.
ரோஹித் அதிரடி
ரோஹித் ஒருபுறம் சதம் அடித்தார். தோனி அரைசதம் அடித்து அம்பயர் அளித்த தவறான தீர்ப்பால் வெளியேறினார். இருவருமே துவக்கத்தில் பொறுமையாக பேட்டிங் செய்தனர். ஒரு கட்டத்தில் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து அணியின் ரன் ரேட்டை உயர்த்த முயன்றார்.
தோனி பொறுமையான ஆட்டம்
ஆனால், தோனி 96 பந்துகளில் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் பொறுமையாக ரன் அடித்ததாலேயே இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை என தோனியை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் அஜீத் அகர்கர்.
ஸ்ட்ரைக் ரேட் மோசம்
அகர்கர் கூறுகையில், முதல் 25-30 பந்துகளில் அவர் ரன் அடிக்கவில்லை என்றால் அந்த சூழ்நிலையில் அது நியாயமானது. ஆனால், 100 பந்துகளை சந்தித்த பின்னரும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 50இல் இருப்பது மோசமானது என விமர்சனம் செய்துள்ளார் அஜீத் அகர்கர்.
தோனியால் தோல்வி
மேலும், ரோஹித் மட்டுமே கூட அணியை வெற்றி பெற வைத்திருப்பார் ஆனால், அவருக்கு தோனி ஓரளவு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் அடித்து ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் தோனி ரன் அடித்ததால் ரோஹித் தான் அதிக சுமையை சுமந்தார் என கூறியுள்ளார் அகர்கர்.