மோசமான தோல்வி
நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 358 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை நிர்ணயித்தும் இந்திய அணியால், அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் கடைசி நேர ரன் குவிப்பை கட்டுப்படுத்தி வெற்றி பெற முடியவில்லை.
பனித்துளிகள்
போட்டி முடிந்த உடன் பேசிய கோலி காற்றில் பனித்துளிகள் அதிகம் இருந்ததால், சுழற் பந்துவீச்சு எடுபடவில்லை என கூறி இருந்தார். அதே போல, தவான் பேட்டி அளிக்கும் போதும் அதையே தான் கூறினார்.
பந்தை தேய்த்த வீரர்கள்
நான்காவது போட்டியில் பனியால் ஏற்பட்ட ஈரப்பதத்தை குறைக்க இந்திய பீல்டர்கள் பந்தை தேய்த்துக் கொண்டே இருந்தது உண்மை தான். ஆனால், இது மட்டுமே போட்டியின் தோல்விக்கு காரணமாக மாறி விடுமா? இல்லை என்கிறார் மதன் லால்.
இதை பயன்படுத்தக் கூடாது
அவர் கூறுகையில், 358 ரன்களை குவித்து விட்டாலே போட்டியில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். பனித்துளிகள் பின்னர் தான் வந்தது. எனவே, அதை ஒரு காரணமாக பயன்படுத்தக் கூடாது. என்னைப் பொறுத்தவரை அது 5 சதவீதம் தான் காரணம் என்றார்.
தோல்விக்கு காரணம்
மேலும், பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி இறைத்தது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என கூறி உள்ளார் மதன் லால். உண்மையும் அது தான். சாஹல் 10 ஓவர்களில் 80 ரன்கள் கொடுத்தார். பும்ரா, புவனேஸ்வர் குமார் இருவரும் ஓவருக்கு 7+ ரன்களுக்கும் மேல் கொடுத்தனர்.
முக்கிய பந்துவீச்சாளர்கள்
முக்கிய பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமார் சொதப்பியதால் தான் இந்திய அணி ஒரேடியாக கடைசி சில ஓவர்களில் ஆஷ்டன் டர்னர் என்ற இளம் ஆஸ்திரேலிய வீரரை சமாளிக்க முடியாமல் பணிந்தது.
பறி போன வாய்ப்புகள்
மேலும், இந்திய வீரர்கள் கேட்ச் வாய்ப்புகளையும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டை விட்டதும் இந்திய அணிக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்தது.
தப்பிக்க நினைக்கிறது
ஆனால், இவற்றை காரணமாக கூறாமல், மதன் லால் கூறுவது போல மிகச் சிறிய அளவில் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்திய பனித்துளி விஷயத்தை பெரிதாக்கி தப்பிக்க நினைக்கிறது இந்திய அணி.
வேடிக்கை
இதில் வேடிக்கை என்னவென்றால், மூன்றாவது போட்டியில் பனித்துளி வரும் என நினைத்து, அதற்கேற்ப திட்டமிட்டோம். ஆனால், பனி வரவில்லை, அதனால் தான் அந்த போட்டியில் தோல்வி அடைந்தோம் என தவான் கூறி இருந்தார்.
இதை கூற முடியாது
இரண்டு போட்டிகளின் தோல்விக்கு கூறிய இதே காரணத்தை கடைசி போட்டியில் கூற முடியாது. ஐந்தாவது போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. அங்கே பனி பெரிய அளவில் இருக்காது என கூறப்படுகிறது. மேலும், போட்டி நடைபெறும் நாள் அன்று மழைக்கும் வாய்ப்புள்ளது. அதை ஒரு காரணமாக கூறாமல் இருந்தால் சரி!
இறுதிப் போட்டி
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருக்கின்றன. இதனால், ஐந்தாவது போட்டி இறுதிப் போட்டியாக மாறி உள்ளது. இந்தியா தோல்விக்கு என்ன காரணம் கூறலாம் என யோசித்துக் கொண்டு இருக்காமல், வெற்றியை நோக்கி சிந்திக்க வேண்டும்.