வியப்பு
பின்னர் பிளே-ஆஃப்பில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக பவுண்டரியே கொடுக்காமல், வெறும் யார்க்கராக அவர் வீசிய கடைசி ஓவரை பார்த்து அனைவரும் வியந்து போன நிலையில், பிசிசிஐ அவரை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளது.
வாய்ப்புகள் கிடைக்கவில்லை
நடராஜன் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் அணிகளில் இடம் பெற்று வருகிறார், ஆனாலும், அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை, இரண்டு ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாற்று வீரராக மட்டுமே இடம் பெற்று வாட்டர் பாய் வேலை செய்து வந்தார்.
வார்னர் அளித்த வாய்ப்பு
அவருக்கு 2020 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர். தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக செயல்படுத்திய நடராஜன் தன் யார்க்கர் பந்துவீச்சின் மூலம் எதிரணிகளை திணற வைத்தார்.
அந்த ஓவர்
அதன் உச்சமாக அமைந்தது பிளே-ஆஃப் போட்டி. டெல்லி கேபிடல்ஸ் அணி 200 ரன்களை நோக்கி வேகமாக முன்னேறிய நிலையில், அந்த அணியை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் கடைசி ஓவரை வீசினார் நடராஜன். தான் வீசிய ஆறு பந்துகளையும் யார்க்கராக வீசினார்.
கடினம்
இது சாதாரண காரியம் இல்லை. பும்ரா போன்ற அனுபவ யார்க்கர் பந்துவீச்சாளர்களால் கூட அத்தனை எளிதில் ஆறு பந்துகளையும் யார்க்கராக வீச முடியாது. அதை செய்துக் காட்டிய நடராஜன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அணியில் இடம்
இந்த நிலையில், காயமடைந்த வருண் சக்கரவர்த்திக்கு பதில் யாரை இந்திய டி20 அணியில் சேர்ப்பது என விவாதித்த பிசிசிஐ தேர்வுக் குழு, வேகப் பந்துவீச்சாளரான நடராஜனை இந்திய அணியில் தேர்வு செய்தது. இந்த முடிவு பாராட்டுக்களைப் பெற்றது.
வார்னர் வாழ்த்து
இந்த நிலையில், நடராஜனுக்கு வாய்ப்பு கொடுத்த டேவிட் வார்னரை எதிர்த்து அவர் ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ளார். அவருக்கு மனமார வாழ்த்து கூறி உள்ளார் வார்னர். "கங்கிராட்ஸ் நட்டு.. ஆஸ்திரேலியாவில் சந்திப்போம்" என புன்னகையுடன் அவரை வாழ்த்தி உள்ளார் வார்னர்.