இந்திய அணி பந்துவீச்சு யார்?
இந்த போட்டி துவங்கும் முன்பு இந்திய அணியின் நிலை பற்றி பார்ப்போம். இந்த போட்டியில் இடம் பெற்ற வீரர்களில் ராகுல் தவிர பிற வீரர்கள் அனைவரும் நம்பிக்கை அளிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடினார்கள். பந்துவீச்சில் க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், பும்ரா, புவனேஸ்வர், கலீல் அணியில் இடம் பெற்றனர்.
இந்திய அணி வீரர்கள் விவரம்
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் கலீல் அஹ்மது.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்
ஆரோன் பின்ச் (கேப்டன்), டி'ஆர்சி ஷார்ட், கிறிஸ் லின், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பென் மெக்டெர்மாட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஆடம் சாம்பா, ஆண்ட்ரூ டை, ஜேசன், பில்லி ஸ்டேன்லேக்
ஆஸ்திரேலியா பேட்டிங் ஸ்கோர்
டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச், டி'ஆர்சி ஷார்ட் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். நான்காவது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் லட்டு மாதிரி கைக்கு கொடுத்த கேட்சை கோட்டை விட்டார் இந்திய கேப்டன் கோலி. அடுத்து கலீல் அஹ்மது ஆஸ்திரேலிய மண்ணில் தன் முதல் பந்தில் ஷார்ட்-இன் விக்கெட்டை எடுத்தார். 8வது ஓவரில் அந்த அணியின் கிறிஸ் லின் கலீல் அஹ்மது பந்தில், மூன்று சிக்ஸர்கள் அடித்து பட்டையைக் கிளப்பினார். அடுத்து வந்த குல்தீப் 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். ஒரு கட்டத்தில் க்ருனால் பண்டியா பந்துவீச்சில் ஆறு சிக்ஸர்கள் அடித்து இந்திய பந்துவீச்சுக்கு கடும் அழுத்தம் கொடுத்தது ஆஸ்திரேலிய அணி. 16.1 ஓவர்கள் இருக்கும் போது மழையால் போட்டி தடைப்பட்டது. இதையடுத்து போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. டிஎல்எஸ் முறைப்படி இலக்கு மாற்றப்பட்டு இந்தியாவிற்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு 174 ரன்கள் இலக்கு.
17 ஓவர்களில் 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது இந்தியா. ரோஹித் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ராகுல் 13 ரன்களில் வெளியேறி மீண்டும் ஒரு முறை முக்கியமான நேரத்தில் அணியை கைவிட்டார். தவான் மறுபுறம் தனியாளாக ஆடி, அரைசதம் அடித்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி 4 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ரிஷப் 20 ரன்களில் வெளியேறினார். இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் க்ருனால் பண்டியா, தினேஷ் களத்தில் இருந்தனர். முதல் மூன்று பந்துகளை க்ருனால் பண்டியா சந்தித்து இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 4வது பந்தில் தினேஷ் கார்த்திக்கும் வெளியேற இந்தியாவின் தோல்வி உறுதியானது.
தோல்வி அடைந்த இந்தியா
நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது இந்தியா. தினேஷ் கார்த்திக் களத்தில் இருப்பதால், நிதாஸ் ட்ராபி போல இப்போதும் கடைசி ஓவர் வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும், இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.