ரோஹித் சர்மா கேப்டன்சி
ரோஹித் சர்மா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற குரல் 2018இல் இருந்தே ஒலித்து வருகிறது. கோலி ஓய்வு எடுக்கும் சில டி20 தொடர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைத்து இருந்தார்.
இந்திய அணிக்கு கிடைத்த வெற்றிகள்
நிதாஸ் ட்ராபி, ஆசிய கோப்பை உள்ளிட்ட சில முக்கிய வெற்றிகள் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணிக்கு கிடைத்தது. அப்போதே அவரை முழு நேர டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. அது விவாதமாக மாறியது.
ஐபிஎல் சாதனை
2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக ரோஹித் சர்மா கேப்டன்சியில் ஐபிஎல் கோப்பை வென்று சாதித்தது. அப்போதும் ரோஹித் சர்மாவை டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறப்பட்டது.
2020 ஐபிஎல் வெற்றி
2019 உலகக்கோப்பை தோல்விக்கு பின்னும் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்தது. தற்போது 2020 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.
கோப்பை ஜெயிக்காத கோலி
அதே சமயம், எட்டு ஆண்டுகளாக விராட் கோலி தலைமையில் ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. அதற்கு விராட் கோலி கேப்டன்சி தான் காரணம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
கம்பீர் விளாசல்
இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்றால் அது இந்திய அணிக்கு தான் நஷ்டம். ரோஹித் சர்மாவுக்கு அல்ல. ஒரு கேப்டனை ஒரே மாதிரி அளவுகளை கொண்டு தான் தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் ரோஹித் 5 ஐபிஎல் கோப்பை வென்றுள்ளார் என்றார்.
இரட்டை கேப்டன் முறை
தேவைப்பட்டால் இரட்டை கேப்டன்சி முறையை கூட பிசிசிஐ கடைபிடிக்கலாம். இங்கே யாரும் மோசமான கேப்டன் என நான் கூறவில்லை. ஆனால், குறைந்த ஓவர் போட்டிகளில் தன் கேப்டன்சிக்கும், விராட் கோலி கேப்டன்சிக்கும் உள்ள வித்தியாசத்தை ரோஹித் சர்மா எடுத்துக் காட்டி உள்ளார் என்றார்.
ஒன்னுமே ஜெயிக்கலை
கோலி மோசமான கேப்டன் என நான் கூறவில்லை. ஆனால், ரோஹித் சர்மாவுக்கு கிடைத்த அதே தளம் அவருக்கும் கிடைத்தது. இருவரும் ஐபிஎல் தொடரில் ஒரே கால அளவுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளனர். அதில் ஒருவர் 5 கோப்பை வென்றுள்ளார். ஒருவர் எதுவுமே ஜெயிக்கவில்லை என கோலியை கடுமையாக தாக்கினார் கம்பீர்.
ரோஹித் - கோலி சர்ச்சை
ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே ஆஸ்திரேலிய தொடரிலும் சர்ச்சை உள்ளது. முதலில் சாதாரண காயத்தை காரணமாக காட்டி ரோஹித் சர்மாவை இந்திய அணியில் சேர்க்கவில்லை. பின் அவர் ஐபிஎல் தொடரில் ஆடிய பின் இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கட்டாயம்
அதிலும் கேப்டன் விராட் கோலி மீது விமர்சனம் கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது கேப்டன்சியை பறித்து, ரோஹித் சர்மாவிடம் அளிக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகின்றன. இனி வரும் தொடர்களை வென்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கோலி.