தோனி ஓய்வு
2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெறும் முன்பே இந்திய அணியில் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனுக்கான தேர்வு துவங்கி விட்டது. ரிஷப் பண்ட் அதில் முன்னணியில் இருந்தார்.
அடுத்த தோனி
ரிஷப் பண்ட் ஆட்டத்தை பார்த்து பலர் இவர் அடுத்த தோனி என கூறி வந்தனர். டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு ரன் குவித்த அவர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், அடுத்த தோனி என்றே பலரால் அழைக்கப்பட்டார்.
மோசமான பார்ம்
இதனிடையே அவரது பேட்டிங் பாம்ர் மோசமானது. அடுத்து அவர் விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பத் துவங்கினார், இதை அடுத்து அவருக்கு அணியில் நிரந்தர இடம் அளிக்கப்படவில்லை. அவருக்கு பதில் மாற்று விக்கெட் கீப்பரை தேடத் துவங்கியது இந்திய அணி.
கேஎல் ராகுல்
அப்போது அணியில் ஏற்கனவே மாற்று துவக்க வீரராக இடம் பெற்று இருந்த கேஎல் ராகுலை அணியில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்தார் கேப்டன் கோலி. அவர் சிறப்பாக கீப்பிங் செய்ததை அடுத்து அவரை அணியின் விக்கெட் கீப்பராக மாற்றி உள்ளார்.
ஐபிஎல் பார்ம்
ரிஷப் பண்ட் அணியில் தன் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் தொடரிலும் பண்ட் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. சுமாரான பேட்டிங் செயல்பாட்டையே வெளிப்படுத்தி உள்ளார்.
கம்பீர் விளாசல்
இந்த நிலையில் கவுதம் கம்பீர் அவரை விளாசி உள்ளார். ஒரு பேட்டியில் ஊடகங்கள் இனி ரிஷப் பண்ட்டை அடுத்த தோனி என கூறுவதை நிறுத்த வேண்டும் என கூறி உள்ளார். மேலும், அப்படி கூறுவதால் அவர் தான் அடுத்த தோனி என நினைத்துக் கொள்கிறார் என்றார்.
சிக்ஸ் அடித்தால் தோனியா?
தோனி பெரிய சிக்ஸ் அடிப்பதில் வல்லவர். அதே போல சிக்ஸ் அடிப்பதால் ரிஷப் பண்ட் அடுத்த தோனியாக மாறிவிட முடியாது. அதை வைத்து மக்கள் அவரை தோனியுடன் ஒப்பிட முடியாது என்றார் கம்பீர். அடுத்து பண்ட்டின் பார்ம் குறித்து பேசினார்.
முன்னேற வேண்டும்
விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் ரிஷப் பண்ட் வெகுவாக முன்னேற வேண்டும். அவர் எப்போதும் தோனி ஆக முடியாது. அவர் ரிஷப் பண்ட் மட்டுமே என்றார் கம்பீர். ரிஷப் பண்ட் இனி இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெறுவதும் கடினம் என கூறப்படுகிறது.