இந்தியா அசத்தல் வெற்றி
மூன்று போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியில் முக்கிய நிகழ்வாக தோனி தன் பேட்டிங் பார்மை மீட்டெடுத்தார். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் என மூன்று தொடர்களையும் கைப்பற்றி இந்தியா அசத்தியுள்ளது.
உரிய பரிசுத்தொகை
இந்த நிலையில், வீரர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் அவர்களுக்கு உரிய அளவில் பரிசுத்தொகை கொடுக்கவில்லை என சாடியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர்.
500 அமெரிக்க டாலர்கள்
ஒருநாள் தொடரின் சிறந்த வீரர் விருது வென்ற தோனி மற்றும் மூன்றாம் போட்டியின் சிறந்த வீரர் விருது வென்ற சாஹல் இருவருக்கும் 500 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.35,000) வழங்கப்பட்டதை குறிப்பிட்ட கவாஸ்கர், இது ஒன்றுமே இல்லை என கூறினார்.
நிறைய சம்பாதிக்கிறார்கள்
மேலும், போட்டியை நடத்துபவர்கள் (கிரிக்கெட் ஆஸ்திரேலியா) ஒளிபரப்பு உரிமை மூலம் நிறைய சம்பாதிக்கிறார்கள். வீரர்களுக்கு நல்ல பரிசுத் தொகை கொடுக்கலாமே என கேட்டுள்ளார். வீரர்களை வைத்து தான் இந்த விளையாட்டு நிறைய சம்பாதிக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார்.
விம்பிள்டனில் அதிகம்
மேலும் டென்னிஸ் தொடரான விம்பிள்டனில் வழங்கப்படும் பெரிய பரிசுத் தொகையையும் சுட்டிக் காட்டிய கவாஸ்கர், "வீரர்கள் தான் பணத்தை சம்பாதிக்கும் வழி. அவர்களுக்கு நல்ல பரிசுத் தொகை வழங்க வேண்டும்" என மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
ஏன் இப்படி பேசுகிறார்?
கவாஸ்கர் கூறிய கருத்தை சில கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்றுள்ளார்கள். அதே சமயம், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் பரிசளிப்பு விழாவிற்கு கவாஸ்கரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் அழைக்கவில்லை. ஒரு வேளை அந்த கடுப்பில் இப்படி பேசுகிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.